சென்னை: கடும் காயத்துடன் இறக்கும் நிலையில் இருந்த குரங்கு ஒன்றை மீட்டு, உடனடியாக அதற்கு அறுவை சிகிச்சை செய்து, வனத்துறையினர் மறுவாழ்வு அளித்துள்ளனர்.
சென்னை புறநகரில் 'பாநெட் மகாக்' வகை குரங்கு பலத்த காயத்துடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.
அதனை மீட்ட வனத்துறையினர் உடனடியாக வனத்துறை கால்நடை மருத்துவர்களிடம் ஆலோசித்த பின்னர், ெபசன்ட் நகரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் குரங்குக்கு மயக்க மருந்து கொடுத்து சிகிச்சை அளிக்கப் பட்டது.
மருத்துவர்கள் குரங்கின் இடுப்புப் பகுதியில் அவசர அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். அதன் வயிறு, கை, கால் பகுதிகளில் காணப்பட்ட காயங்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, குரங்கின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இறக்கும் நிலையில் இருந்த ஒரு குரங்கை மீட்டு, அறுவை சிகிச்சை மேற்கொண்டு, குரங்கை காப்பாற்றி உள்ள வனத்துறை அதிகாரிகள், மருத்துவர்களுக்கு வனம், சுற்றுச்சூழல் துறை கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹு பாராட்டுகளைத் தெரிவித்தார்.
மேற்குத் தொடர்ச்சி மலையிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த 'பாநெட் மகாக்' வகை குரங்குகள் பரவலாகக் காணப்படுகின்றன.
குழுவாக ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்குச் செல்வது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களிலும் ஒரு ஒழுங்குமுறையுடன் இவ்வகை குரங்குகள் வாழ்ந்து வருகின்றன. வனப்பகுதிகளைக் காட்டிலும் மனிதர்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் இவ்வகை குரங்குகள் அதிகமாகக் காணப்படுகின்றன.