சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொவிட்-19, ஓமிக்ரான் கிருமிப் பரவலைத் தடுக்க, இன்று மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையாக முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.
மருத்துவமனைகள், மருந்தகங்கள், பெட்ரோல் நிலையங்கள், ஏடிஎம் இயந்திரங்கள் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடந்த ஞாயிறன்று நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகள், தளர்வுகள் இவ்வாரமும் தொடரும்.
அத்துடன், வெளியூரில் இருந்து வரும் ரயில், விமானப் பயணிகளின் நலன் கருதி சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள், கோயம்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோ சேவைகள் செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும்.
அதேபோல், வாடகை கார்களும் பயணிகளை ஏற்றிச்செல்ல அனுமதிக்கப்படும் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.
கிருமித்தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில், அரசு மேற்கொள்ளும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தங்களது முழு ஒத்துழைப்பை மக்கள் வழங்கவேண்டும் எனவும் முதல்வர் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், முழு ஊரடங்கை முன்னிட்டு நேற்றைய தினம் காசிமேடு மீன் சந்தையில் கூட்டம் அலைமோதியது. மீன் வாங்கும் ஆர்வத்தில் சமூக இடைவெளியை மக்கள் மறந்து போயினர்.
இதற்கிடையே, தலைநகர் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் கொரோனா பாதிப்பு குறைவதாகவும் தடுப்பூசியால் உயிரிழப்பு பெருமளவில் குைறந்துள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் நேற்று 50,000 இடங்களில் 19வது கொரோனா தடுப்பூசி முகாம் மும்முரமாக நடைபெற்றது.
வீடுகளுக்கு அருகிலேயே தடுப்பூசி போடப்படுவதால், மக்கள் தயங்காமல் தடுப்பூசி போட்டுக்கொண்டு பாதுகாப்பு பெறவேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் அன்றாட கிருமி பாதிப்பு 30,000ஐ நெருங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 29,870 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 33 பேர் உயிரிழந்ததாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, தமிழக அரசு அமல்படுத்தி உள்ள ஞாயிறு ஊரடங்கால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது மக்களும் வியாபாரிகளும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
மற்ற நாட்களைப் போல் ஞாயிறன்றும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக ஜெயா தொலைக்காட்சி செய்தி தெரிவித்தது.