புகழ்பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படைத்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கை வரலாறு ஆங்கிலத்தில் படைக்கப்பட்டுள்ளது. 'கல்கி கிருஷ்ணமூர்த்தி: ஹிஸ் லைஃப் ஆன் டைம்ஸ்' எனும் நூலின் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று சென்னையில் இடம்பெற்றது. முதல் நூலை பெற்றுகொண்டார் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி திரு கே. சந்துரு.
பெரும்பாலும் ஆங்கிலத்தில் பேசும் தற்போதைய தலைமுறைக்கு இந்நூல் வரமாக அமையும் என்று அவர் கூறினார். இந்தியாவில் கடந்த 100 ஆண்டுகளின் முக்கிய நிகழ்வுகள் பற்றி ஆழமாகத் தெரிந்துக்கொள்ள இந்த சுயசரிதை உதவும் என்றார் அவர். காங்கிரஸ் கட்சியில் தமக்கு நிறைய நண்பர்கள் இருந்தபோதும், அக்கட்சியின் சில கொள்கைகளுக்கு கல்கி எதிர்ப்பு தெரிவிக்க அஞ்சவில்லை என திரு சந்துரு குறப்பிட்டார்.
பேராசிரியர் கல்கியின் வாழ்க்கை வரலாற்றை எழுத்தாளர் சுந்தா அவர்கள் முதலில் தமிழில் 1973ல் வெளியிட்டார். அந்நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் கல்கியின் பேத்தியான கௌரி ராமநாரயணன்.
திரு கல்கியின் வாழ்க்கை தென்னிந்திய கலாசாரத்தோடு பிண்ணிபினைந்தது. அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது அவ்வளவு சுலபமான காரியமல்ல என நிகழ்ச்சியில் கலந்துகொண்ட எழுத்தாளரும், ஊடகவியலாளரும் திரு மாலன் கூறினார். அதை எழுத்தாளர் கௌரி சிறப்பாகச் செய்திருப்பதாக அவர் பாராட்டினார்.
இந்நூலில் கல்கியின் வாழ்க்கையை வர்ணிப்பதோடு, அவர் வாழ்ந்த காலத்தின் வரலாறும், அவர் பங்கெடுத்த விடுதலைப் போராட்டங்கள், சமூகச் சீர்திருத்த இயக்கங்கள், தமிழ் இலக்கிய வளர்ச்சி, தென்னகக் கலைகளின் மறுமலர்ச்சி ஆகியவையும் அடங்கும்.
'சிவகாமியின் சபதம்’, ‘பார்த்திபன் கனவு' உள்பட 35 சிறுகதைத் தொகுதிகள், நாவல்கள், கட்டுரைகள், மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை கல்கி எழுதியுள்ளார்.