சென்னை: தமிழகத்தில் ஒரு லட்சத்து 11,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்தக் குறைபாட்டைப் போக்கும் வகையில் ஊட்டச்சத்து பெட்டகங் கள் வழங்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், குழந்தைகளுக்கு பெற்றோர் தமிழில் பெயர் வைக்கும் படியும் கேட்டுக்கொண்டார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், 285 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் பங்கேற்ற கர்ப்பிணிப் பெண்களுக்கு மாலை, வளையல் அணிவித்து, புடவை, வளையல், பூ, பழம், மஞ்சள், சந்தனம், கண்ணாடி, தட்டு ஆகியவை அடங்கிய சீர்வரிசைத் தட்டுகளை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்டோர் வழங்கினர்.
நிகழ்ச்சியில் பேசிய மா.சுப்பிரமணியன், "மாநிலம் முழுவதும் சத்துக் குறைபாட்டுடன் உள்ள குழந்தைகள் குறித்து நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 111,000 குழந்தைகளுக்கு சத்துக் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர் களில், 43,000 பேருக்கு இதயக் கோளாறு, சிறுநீா் கழிப்பதில் பிரச் சினை உள்ளிட்ட ஏதேனும் ஒரு பாதிப்பு உள்ளதும் தெரியவந்துள்ளது.
"இப்பாதிப்புகளுக்கு உகந்த சிகிச்சைகளை வழங்குவதற்கும் அரசு முன்வந்துள்ளது.
"அத்துடன், சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பேரீச்சம்பழம், வேர்க்கடலை உள்ளிட்ட பல்வேறுவிதமான ஊட்டச்சத்து பொருள்கள் அடங்கிய பெட்டகங்களும் வழங்கப்பட்டு வருகின்றன," என்றும் அமைச்சர் சொன்னார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழில் பெயர் வைக்கும்படி யாரை யும் கட்டாயப்படுத்த முடியாது. வளைகாப்பில் பங்கேற்றுள்ள பெண்கள் தங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயா் வைக்கவேண்டும் என்பது எனது வேண்டுகோள். விரைவில் தமிழில் பெயர் வைத்தவர்களுக்கு சிறப்புப் பரிசுகளும் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தைச் செலுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது," என்றும் அவர் கூறினார்.
சென்னையில் தேசிய ஊட்டச்சத்து வார விழாவையொட்டி சமூக நலத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட சமூக வளைகாப்பு விழாவில் 285 கர்ப்பிணிப் பெண்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு மாலை, வளையல் அணிவித்து, புடவை, பழங்களுடன் சீர்வரிசைத் தட்டுகளும் வழங்கப்பட்டன. படம்: ஏஎஃப்பி