தூத்துக்குடி: ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறை சார்பில் நடந்த முதற்கட்ட அகழாய்வுப் பணி நிறைவடைந்துள்ளது. மூன்று இடங்களில் நடந்த இந்தப் பணியில் நூற்றுக்கணக்கான முதுமக்கள் தாழிகள், இரும்பு, வெண்கலம், தங்கம், மண்பாண்டம் உட்பட பல பொருள்கள் கிடைத்துள்ளன.
அவற்றை உள்ளது உள்ளபடியே காட்சிப்படுத்தும் வகையில் உலகத் தர அருங்காட்சியகம் அமைக்க பணிகள் தொடங்கியுள்ளன.
ஆதிச்சநல்லூர் பரம்பை (மண் மேடு) சுற்றி 114 ஏக்கரில் இரும்பு வேலி அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இந்திய அளவிலான சிறப்பு வல்லுநர்கள் ஆதிச்சநல்லூர் வந்து, இங்கு கிடைத்த பொருள் களைச் சோதனையிட்டனர்.
வெளிநாட்டில் உள்ள ஆதிச்சநல்லூர் பொருள்களைக் கொண்டு வந்து காட்சிப்படுத்தவும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.
இதனிடையே, ஆதிச்சநல்லூர் முதற்கட்ட அகழாய்வுப் பணி பற்றி கருத்து தெரிவித்த திருச்சி மத்திய தொல்லியல் துறை மண்டல இயக்குநர் அருண்ராஜ், "இதுவரை நடந்த அகழாய்வு சம்பந்தப்பட்ட பொருள்களை ஆவணப்படுத்தும் பணி தொடர்ந்து நடக்கும். இங்கு முற்கால மக்களின் வாழ்விடத்தை தேடி அகழாய்வுப் பணியை விரைவில் தொடங்க உள்ளோம்," என்றார்.