புதுடெல்லி: தமிழ்நாட்டிற்கு ரூ.3,500 கோடி வட்டியில்லா கடனை மத்திய அரசாங்கம் கொடுத்து இருக்கிறது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புதுடெல்லியில் சனிக்கிழமை இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்தார்.
மதுரையில் நடக்கவிருக்கும் ஜிஎஸ்டி மன்றக் கூட்டம் பற்றியும் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்டம் குறித்தும் தாங்கள் விவாதித்ததாக தமிழக அமைச்சர் கூறினார்.
"இந்திய நிதியமைச்சருடன் பேச்சு நடத்தினேன். அதற்கு முன்னதாக நிதித் துறை அதிகாரிகளைச் சந்தித்தேன்.
"கடன் ஏற்பாட்டை விரைந்து நிறைவேற்றித் தரும்படி நிதியமைச்சரைக் கேட்டுக்கொண்டேன்," என்று திரு தியாகராஜன் கூறினார்.
"சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட ரயில் திட்டம் பற்றிய சில விவரங்களை அதிகாரிகள் கேட்டார்கள். அவற்றை எல்லாம் தாக்கல் செய்துள்ளோம்.
"விரைவில் நிதி ஏற்பாடு செய்யப்படும் என்று அதிகாரிகள் உறுதி கூறி இருக்கிறார்கள்," என்றும் தமிழக அமைச்சர் கூறினார்.
தமிழ்நாட்டுக்கு மத்திய அரசாங்கம் கொடுத்து இருக்கும் ரூ.3,500 கோடி கடனில் ரூ.185 கோடி கண்ணாடி கம்பிவட இணைப்புத் திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும்.
நெடுஞ்சாலைத் துறை திட்டங்களுக்கு 3,265 கோடி ரூபாய் செலவிடப்படும் என்று திரு தியாகராஜன் கூறினார்.
மதுரையில் தேசிய மருந்தாக்கக் கல்வி, ஆய்வுப் பயிலகம் ஒன்றை அமைக்க தமிழக அரசு விரும்புவதாகவும் அதற்கு வேண்டிய தொகையை ஒதுக்கித் தரும்படி மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுப்பதாகவும் திரு தியாகராஜன் குறிப்பிட்டார்.
"இதற்கான அறிவிப்பு இடம்பெற்றது. ஆனால் தொகை ஒதுக்கீடு எதுவும் இதுவரை இல்லை," என்று அவர் கூறினார்.
"இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதற்குப் புத்துயிர் அளிக்கப்பட்டு இந்தப் பயிலகம் அமைக்கப்பட வேண்டும்.
"இது மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உறுதுணையாக இருக்கும்," என்றும் தான் மத்திய அதிகாரிகளிடம் எடுத்துச் சொல்லி விளக்கியதாக தமிழக அமைச்சர் தெரிவித்தார்.
அதிநவீன எய்ம்ஸ் மருத்துவ மனை மதுரை அருகே அமையும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.