ஈரோடு: தனது பூர்வீக வீட்டை கல்விக்கூடமாக மாற்றி, அங்கு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும் மதுரையைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிராஜமாணிக்கத்துக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அவரது இந்த முயற்சியால் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
திருவாதவூரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் குடிமைப்பணித் தேர்வில் தேர்ச்சி பெற்றதும் கேரள மாநிலம், திருச்சூரில் உதவி ஆட்சியராக தனது பணியைத் தொடங்கினார். பிறகு அம்மாநிலத்தின் பல்வேறு துறைகளில் அதிகாரியாகப் பணியாற்றி நன்மதிப்பைப் பெற்றார்.
மூணாறு மாவட்ட உதவி ஆட்சியராகப் பணியாற்றியபோது பன்னாட்டு நிறுவனங்கள் அரசு நிலத்தை ஆக்கிரமித்திருந்தது தொடர்பாக ராஜமாணிக்கம் மேற்கொண்ட துணிச்சலான நடவடிக்கைகள் கேரள மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதன் மூலம் ஆறாயிரம் ஏக்கர் நிலத்தை மீட்டெடுத்தார் ராஜமாணிக்கம்.
இந்நிலையில் திருவாதவூரில் தனது பெற்றோர் வசித்த பூர்வீக வீட்டை ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் கல்விக்கூடமாக மாற்றி உள்ளார். அங்கு அரசு உயர் பதவிகளுக்காக நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கடந்த ஏழு ஆண்டுகளாக இலவசமாக எழுத்துத் திறன், ஓவியம், சிலம்பம், வளரி, யோகா, தையல், தட்டச்சு உள்ளிட்ட 12 வகையான பயிற்சிகளை வழங்கி வருகிறார் ராஜமாணிக்கம்.
மேலும், இந்த ஆண்டு முதல், பள்ளி மாணவர்களுக்கான கோடைகால விடுமுறைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. பயிற்சிக்குத் தேவைப்படும் பொருள்களையும் இந்தக் கல்விக்கூடமே இலவசமாக வழங்குகிறது. கல்விக்கூடத்தை ராஜமாணிக்கத்தின் நண்பர்களும் சமூக ஆர்வலர்களும் நிர்வகிக்கின்றனர்.

