பெரும்பாறை: திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் உத்தரவின் பேரில் வத்தலக்குண்டு வனச்சரகர் ராம்குமார் தலைமையில் வனவர்கள் ரமேஷ், முத்துகுமார், வனக்காப்பாளர்கள் தாண்டிக்குடி, பெரும்பாறை, சித்தரேவு, வத்தலக்குண்டு உள்ளிட்ட பகுதியில் சுற்றுக்காவல் சென்றனர்.
அப்போது வத்தலக்குண்டு வனச்சரக எல்லைக்குட்பட்ட தனியார் பலதுறைத் தொழிற்கல்லூரி அருகே மூவர் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்தனர்.
இதையடுத்து வனத்துறையினர் அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த சசிக்குமார் (வயது36), கொடைக்கானல் பள்ளங்கியைச் சேர்ந்த ஜெயராமன் (74), வீரக்கல் கும்மம்பட்டியைச் சேர்ந்த செல்லத்துரை (49) என்பது தெரிய வந்தது.
மேலும் அவர்கள் விற்பனைக்காக இரண்டு யானை தந்தங்களைப் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த மூவரையும் கைது செய்து வனத்துறையினர் அவர்களிடம் இருந்த இரண்டு தந்தங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


