சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 23) அன்று 3,496 பேருக்குப் புதிதாக கொவிட்-19 கிருமி தொற்று கண்டறியப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
ஒருவர் மாண்டதாகவும் அமைச்சு கூறியது.
சனிக்கிழமை 2.64 ஆக இருந்த வாராந்திரத் தொற்றுப் பரவல் விகிதம், ஞாயிற்றுக்கிழமை 2.75 ஆக உயர்ந்தது.
வாராந்திர தொற்றுப் பரவல் விகிதம் ஒன்றுக்கு மேல் இருப்பது, புதிய தொற்றுச் சம்பவங்களின் வாராந்திர எண்ணிக்கை உயர்வதைக் குறிக்கும்.
ஞாயிற்றுக்கிழமை பதிவான புதிய தொற்றுச் சம்பவங்களில் 2,007 சம்பவங்கள் 'பிசிஆர்' கிருமிப் பரிசோதனைகளின்வழி கண்டுபிடிக்கப்பட்டன.
அவர்களில் 1,577 பேர் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 430 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள்.
மேலும் 1,489 பேருக்கு 'ஏஆர்டி' பரிசோதனைகளின் மூலம் கிருமித்தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
அவர்களுக்கு மிதமான தொற்று அறிகுறிகள் உள்ளதாகவும் அபாயம் குறைவாக இருப்பதாகவும் மருத்துவர்கள் கவனித்துக் கூறியுள்ளனர்.
'ஏஆர்டி' பரிசோதனைகளின் மூலம் தொற்று கண்டறியப்பட்டவர்களில் 1,480 பேர் உள்நாட்டைச் சேர்ந்தவர்கள். 9 பேர் வெளிநாட்டவர்கள்.
தொற்று காரணமாக ஒருவர் உயிர் இழந்தார் என்ற சுகாதார அமைச்சு அது பற்றி மேல்விவரம் அளிக்கவில்லை.
மருத்துவமனைகளில் 433 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அவர்களுள் 29 பேர் சுவாசிக்க உயிர் வாயுவின் உதவி தேவைப்பட்டுள்ளது. ஒன்பது பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி மொத்தம் 313,772 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது. அதனுடன் 848 பேர் தொற்று காரணமாக உயிர் இழந்தனர்.
இந்நிலையில், தடுப்பூசி பெற தகுதிபெற்ற மக்களில் 91 விழுக்காட்டினர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
மக்கள் தொகையில் 55 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் கூடுதல் தடுப்பூசி போட்டுள்ளனர்.