சிங்கப்பூர்வாசிகள் உட்பட சிங்கப்பூருக்கு வரும் எல்லாப் பயணிகளும், இங்கு வந்து தரையிறங்குவதற்கு முன்னர் எஸ்ஜி அரைவல் கார்ட் எனப்படும் சிங்கப்பூர் வருகை அட்டையைக் கட்டாயம் நிரப்ப வேண்டும்.
குடிநுழைவு, சுங்கச்சாவடி ஆணையம் இதை புதன்கிழமை (டிச. 21) அன்று தெரிவித்துள்ளது.
அந்த அட்டைகளைக் கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை என்றும் ஆணையம் கூறியது.
அட்டையை நிரப்ப உதவி செய்வதாகக் கூறி கட்டணம் வசூலிக்க முற்படும் வணிக நிறுவனங்கள், இணையத்தளங்களுக்கு எதிராகவும் ஆணையம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.
முன்கூட்டியே எஸ்ஜி வருகை அட்டையை நிரப்பவில்லை என்றால், பயணிகள் அவற்றை நிரப்பிவிட்டு குடிநுழைவுக்காக மீண்டும் ஆரம்பத்திலிருந்து வரிசையில் காத்திருக்க வேண்டி இருக்கும் என்று ஆணையம் கூறியது.
எஸ்ஜி வருகை அட்டையை சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு முன்னதாக மூன்று நாள்களுக்குள் நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.
ஆணையத்தின் இணையத்தளத்தில் அல்லது மைஐசிஏ (MyICA) செயலியில் பயணிகள் அதைச் செய்யலாம்.
சிங்கப்பூர்வாசிகள் மூன்று நிமிடங்களுக்குள் அதை நிரப்பி சமர்ப்பிக்கலாம் என்றும் வெளிநாட்டவர்களுக்கு ஐந்து முதல் ஏழு நிமிடங்கள் வரை பிடிக்கும் என்றும் ஆணையம் தெரிவித்தது.