சிங்கப்பூர், சீனா உள்ளிட்ட ஆறு இடங்களிலிருந்து கர்நாடகா செல்லும் அனைத்துப் பயணிகளும் இனி தங்களை ஏழு நாள்களுக்கு இல்லத்தில் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்.
சீனா, ஹாங்காங், சிங்கப்பூர் ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து ஆகியவை அந்த ஆறு இடங்கள்.
இந்தியா செல்லும் எல்லாப் பயணிகளும் பிசிஆர் பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசாங்கம் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தியுள்ளது.
சீனா அதன் எல்லைகளை வரும் 8ஆம் தேதி திறக்கவுள்ளதை அடுத்து, பல நாடுகள் கொவிட்-19 தொடர்பான பயண விதிமுறைகளைக் கடுமையாக்கி வந்துள்ளன. ஆனால் இதுவரை மற்ற உலக நாடுகள் இல்லத் தனிமை உத்தரவை விதித்ததாகத் தெரியவில்லை.
ஏழு நாள் இல்லத் தனிமையைக் கட்டாயமாக்கும் விதிமுறையை கர்நாடக அரசாங்கம் சனிக்கிழமை அன்று தெரிவித்தது.
நோய் அறிகுறிகள் இல்லாத பயணிகளும் இல்லத் தனிமையில் இருக்கவேண்டும்.
இல்லத் தனிமையில் உள்ள பயணிகளுக்கு சளி, காய்ச்சல், இருமல், உடல்வலி, தலைவலி உள்ளிட்ட கொவிட்-19 அறிகுறிகள் இருந்தால், சுகாதார அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் கர்நாடக அரசாங்கம் கூறியது.
மேலும், அதிக தொற்று அபாயம் உள்ள நாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம் கொவிட்-19 தொற்று அறிகுறிகள் காணப்பட்டால், அவர்கள் குறிப்பிட்ட சிகிச்சை நிலையங்களில் தனிமையில் வைக்கப்படுவர்.
சென்ற வாரம் பெங்களூரு அனைத்துலக விமான நிலையத்தில் 12 பயணிகளுக்கு கொவிட்-19 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கர்நாடக அரசாங்கம் ஏற்கெனவே பள்ளிகள், கல்லூரிகள், கடைத்தொகுதிகள், உணவகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று கூறியுள்ளது.