சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்லும் பயணிகள் கட்டாயமாக கொவிட்-19 பரிசோதனைக்கு உட்பட வேண்டியது இல்லை என்று சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகம் தெரிவித்திருக்கிறது.
இந்தியா செல்ல விரும்பும் சிங்கப்பூர் பயணிகள், தங்களது பயணத்திற்குமுன் கொவிட்-19 பரிசோதனை செய்துகொண்டு, ‘தொற்று இல்லை’ எனச் சான்று பெற்று இருக்க வேண்டும் என்று சில ஊடகங்களில் செய்தி வெளியாகி இருந்தது.
சீனா, ஜப்பான், தென்கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா செல்வோர் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொண்டிருக்க வேண்டும் என்று இந்த மாதம் 24ஆம் தேதி இந்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியதாக அச்செய்திகள் குறிப்பிட்டன.
அந்நாடுகளிலிருந்து செல்லும் பயணிகள் இந்திய விமான நிலையங்களில் வெப்பநிலைப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்றும் கொவிட்-19 தொற்றுக்கான அறிகுறிகள் தெரிந்தால் அல்லது கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் அச்செய்திகள் கூறின.
இதுகுறித்து சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது, “சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங், பேங்காக் என்று அமைச்சர் கூறியது காணொளியில் தெளிவாகத் தெரிகிறது. அவர் தமது அறிக்கையில் சிங்கப்பூரைப் பற்றிக் குறிப்பிடவே இல்லை,” என்று விளக்கம் கிடைத்ததாக ‘சேனல் நியூஸ் ஏஷியா’ செய்தி வெளியிட்டுள்ளது.