ஒவ்வொரு சிங்கப்பூர் குடும்பமும் இன்றுமுதல் $300 மதிப்பிலான சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம். அவற்றில் பாதியளவு, அதாவது $150 பற்றுச்சீட்டுகள், திட்டத்தில் பங்குபெறும் பேரங்காடிகளில் பயன்படுத்துவதற்குரியவை.
ஃபேர்பிரைஸ், ஷெங் சியோங், பிரைம், ஹாவ் மார்ட், யூ ஸ்டார்ஸ் ஆகிய ஐந்து பேரங்காடிகளில் இந்தப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம். சிங்கப்பூர் முழுவதும் இந்நிறுவனங்களிடம் 300க்கும் மேற்பட்ட பேரங்காடிகள் உள்ளன.
இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து 'சிடிசி' பற்றுச்சீட்டுகள் பேரங்காடிகளில் பயன்படுத்த முடிவது இதுவே முதன்முறை. ஜயண்ட், கோல்ட் ஸ்டோரேஜ் போன்ற கூடுதலான பேரங்காடிகள் பின்னர் இத்திட்டத்தில் சேர்க்கப்படலாம்.
எஞ்சிய $150 மதிப்பிலான பற்றுச்சீட்டுகளை ஏறத்தாழ 20,300 உணவங்காடிக் கடைகள் மற்றும் வீடமைப்புப் பேட்டைகளில் இயங்கும் வணிகங்களில் பயன்படுத்தலாம்.
விலைவாசி உயர்வு மற்றும் பொருள், சேவை வரி உயர்வின் தாக்கத்தைத் தணிக்கும் விரிவான தொகுப்புத் திட்டத்தின் ஓர் அங்கமாக இந்தப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படுவதாக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.
கம்போங் அட்மிரல்ட்டியில் நடைபெற்ற 'சிடிசி' பற்றுச்சீட்டுகளின் தொடக்க நிகழ்ச்சியில் அவர் இதனைத் தெரிவித்தார்.