பொங்கோல் சுமாங் வாக் பகுதி குடியிருப்பாளர்களுக்கான கொவிட்-19 பரிசோதனை இன்று காலை (ஜூன் 8ஆம் தேதி) தொடங்கியது.
அங்குள்ள ஒரு வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்கில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, சுகாதார அமைச்சு சிறப்பு கொவிட்-19 பரிசோதனை நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்துள்ளது.
புளோக் 325Aல் வசிக்கும் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த எட்டுப் பேர்க்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
மொத்தம் 124 குடும்பங்களைச் சேர்ந்த 361 குடியிருப்பாளர்கள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்று பாசிர் ரிஸ் - பொங்கோல் குழுத்தொகுதி எம்.பி. டாக்டர் ஜனில் புதுச்சேரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பரிசோதனை நடவடிக்கை அறிவிப்பால் குடியிருப்பாளர்கள் பதற்றமின்றி, அமைதியாக இருப்பதாகத் தெரிகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
“அவர்கள் அமைதியுடன் இருப்பதோடு, பலரும் உதவிக்காக தொண்டூழியம் புரிய முன்வந்தனர்,” என்றார் சுகாதார, தொடர்பு, தகவல் மூத்த துணை அமைச்சருமான டாக்டர் ஜனில்.
தொற்றுப் பரிசோதனைக்காக நேற்றுக் காலை வந்தோரில் 29 வயதான திரு முகம்மது ஜலாலுதீனும் ஒருவர். காலை 9.20 மணிக்கெல்லாம் பரிசோதனையை முடித்துக்கொண்டு, அவர் அங்கிருந்து வெளியேறினார்.
தாமாகவே வந்து அவர் பரிசோதனை செய்துகொண்டார். அவரின் மனைவியும் எட்டு வயதாகும் மூத்த மகனும் பின்னர் வந்து பரிசோதனை செய்துகொள்ள இருப்பதாக அவர் கூறினார்.
“பரிசோதனையின்போது சற்று அசௌகரியமாக இருந்தது. ஆனால், சில நொடிகளில் அது முடிந்துவிட்டது,” என்றார் புளோக் 325Aல் கிட்டத்தட்ட ஈராண்டுகளாக வசித்துவரும் திரு ஜலாலுதீன்.
அவர் எச்சில்/சளி மாதிரிப் பரிசோதனை செய்துகொண்டது இதுவே முதன்முறை.
சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தில் பணிபுரியும் அவர், பரிசோதனை செயல்திறன்மிக்கதாகஇருந்தது என்றும் விரைவாக முடிந்துவிட்டது என்றும் கூறினார்.
“எங்களது புளோக்கில் கிருமித்தொற்று பரவிவிட்டது சற்று கவலை அளிப்பதாக இருந்தாலும் நாங்கள் பாதுகாப்பாக இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்,” என்றார் அவர்.
நாளை காலை 9 மணியில் இருந்து மாலை 4 மணிவரை அங்கு தொற்றுப் பரிசோதனை இடம்பெறும்.