அமெரிக்க உயிரித் தொழில்நுட்ப நிறுவனமான நோவாவேக்ஸ் தயாரித்துள்ள கொவிட்-19 தடுப்பூசியின் முதல் தொகுதி நேற்று புதன்கிழமை (மே 4) சிங்கப்பூர் வந்துசேர்ந்தது. இந்த மாத இறுதிக்குள் 21 இடங்களில் இந்தத் தடுப்பூசி வழங்கப்படும்.
முன்னாள் பீஷான் பார்க் உயர்நிலைப்பள்ளி இருந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தனது முதல் கூட்டுப் பரிசோதனை, தடுப்பூசி மையத்தில் நுவாக்சோவிட் தடுப்பூசி போடப்படும் என்று சுகாதார அமைச்சு புதன்கிழமை இரவு தெரிவித்தது. இந்த மாத இறுதியில் செயல்படத் தொடங்கவிருக்கும் இத்தகைய மையங்களில் கொவிட்-19 பரிசோதனை செய்துகொள்வதோடு தடுப்பூசியும் போட்டுக்கொள்ளலாம்.
அத்துடன், இந்த மாத இறுதியில் 20 பொதுச் சுகாதார தயார்நிலை மருந்தகங்களிலும் இந்தத் தடுப்பூசி கிடைக்கும்.
நுவாக்சோவிட், புரதம் சார்ந்த தடுப்பூசியாகும். அறிகுறி உடைய கொவிட்-19க்கு எதிராக இந்தத் தடுப்பூசி ஏறக்குறைய 90 விழுக்காடு செயல்திறன் கொண்டிருந்ததாக சில மருத்துவ ஆய்வு முடிவுகள் காட்டின. ஒப்புநோக்க, ஃபைசர்-பயோஎன்டெக், மொடர்னா தடுப்பூசிகள் ஏறத்தாழ 95 விழுக்காடு செயல்திறன் கொண்டுள்ளன.
நுவாக்சோவிட் தடுப்பூசியை வழங்க, தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் சுகாதார தயார்நிலை மருந்தகங்களுடன் தான் பணியாற்றி வருவதாகக் கூறிய சுகாதார அமைச்சு, எதிர்வரும் வாரங்களில் இதுகுறித்த மேல்விவரங்கள் அறிவிக்கப்படும் எனச் சொன்னது.