எண் 31 கிராஞ்சி கிரசென்டில் 27 வயதான வெளிநாட்டு ஊழியர் ஒருவர் அசைவின்றி கிடந்தது கடந்த வெள்ளிக்கிழமை (மே 15) காலை 6.40 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
முதல்கட்ட விசாரணைகளில், அவரது மரணத்தில் வேறு யாருக்கும் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கவில்லை என்று தெரியவந்துள்ளதாக போலிஸ் தெரிவித்தது; விசாரணை தொடர்கிறது.
கடந்த மூன்று வாரங்களுக்குள், வெளிநாட்டு ஊழியர்களிடையே நிகழ்ந்துள்ள இயற்கைக்கு மாறான இரண்டாவது மரணம் இது.
கடந்த மாதம் 23ஆம் தேதி 46 வயதான இந்திய ஊழியர் அழகு பெரியகருப்பன் கூ டெக் புவாட் மருத்துவமனையின் படிக்கட்டு தளத்தில் அசைவின்றி கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது; கொவிட்-19ஆல் பாதிக்கப்பட்டிருந்த அவர், கீழே விழுந்ததால் ஏற்பட்ட காயங்களால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்த 27 வயது ஊழியரின் குடும்பம், அவரது முதலாளி, பங்ளாதேஷ் தூதரகம் ஆகியவற்றுக்கு அவரது மரணம் பற்றி தெரிவிக்கப்பட்டுவிட்டதாக நேற்று டிஎன்பியிடம் மனிதவள அமைச்சின் பேச்சாளர் குறிப்பிட்டார்.
அந்த ஊழியரின் குடும்பத்துக்கு உதவ, அவர் பணிபுரிந்த நிறுவனம், வெளிநாட்டு ஊழியர் நிலையம் ஆகியவற்றுடன் இணைந்து பணியாற்றுவதாக அமைச்சு குறிப்பிட்டது.
அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்படும் என்று பங்ளாதேஷ் தூதரகம் தெரிவித்தது.
கியட் லீ லேண்ட்ஸ்கேப் & பில்டிங் என்ற நிலவனப்பு நிறுவனத்தில் அந்த ஊழியர் பணிபுரிந்ததாகவும் எண் 31 கிராஞ்சி கிரசென்டில் இயங்கும் விடுதியாக மாற்றப்பட்ட தொழிற்சாலையை அந்த நிறுவனம்தான் நடத்துவதாகவும் டிஎன்பி (தி நியூ பேப்பர்) குறிப்பிட்டது.
ஆனால், உயிரிழந்த அவர், அந்த விடுதியைச் சேர்ந்தவரா என்பது குறித்து தெரியவில்லை.
கிருமிப் பரவலை முறியடிக்கும் அதிரடித் திட்டம் நடப்பில் இருக்கும் இந்தக் காலகட்டத்தில் வெளிநாட்டு ஊழியர்களின் மனநலத்திலும் அக்கறை செலுத்த வேண்டும் என ஆலோசனைக் குழுக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு மனநல ஆலோசனை வழக்கிய தொண்டூழியர்களில் ஒருவரான திருவாட்டி பியா, பெரும்பாலான ஊழியர்கள் அவர்களது வாழ்வாதாரம், சொந்த நாட்டில் வசிக்கும் குடும்பத்தினர் ஆகியவற்றைப் பற்றி பெரிதும் கவலைப்படுவதாகத் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் வெளிநாட்டு ஊழியர்களின் மன அழுத்த நிலை, அவர்களது அக்கறைகள் பற்றி அறிவோம் என்று சுகாதார அமைச்சர் கான் கிம் யோங் கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.
அவர்களுடன் உரையாடி, அவர்களது மனநலம் பற்றி அறிந்துகொள்ள தூதுவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online