நோய்ப்பரவலை முறியடிப்பதற்கான காலம் முடிந்து சேவைகள் கட்டங்கட்டமாகத் திறந்துவிடப்படுவதைப் பரிசீலிக்கும்போது சிங்கப்பூர் உயிருக்கும் வாழ்வாதாரத்துக்கும் முன்னுரிமை அளித்து வருகிறது என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
“எங்களது கவனமான அணுகுமுறையால் பலர் அதிருப்தியடைந்திருக்கலாம். ஆனால், சிங்கப்பூரில் கிருமித்தொற்று விகிதத்தைக் குறைவாக வைத்திருக்கும் அதே வேளையில் சிங்கப்பூரர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சேவைகளைத் திறந்துவிட எங்களால் முடிந்த அனைத்தையும் மிகக் கவனமாக மேற்கொள்கிறோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்,” என்று திரு வோங் நேற்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் விவரித்திருந்தார்.
“கட்டுப்பாட்டுடன் கூடிய சேவைகள் மறுதிறப்பு, புதிய கிருமித்தொற்று சம்பவங்களை விரைவாகவும் எளிதாகவும் கண்டுபிடிக்க உதவும். மக்கள் தொகையின் வெவ்வேறு பிரிவினரைத் தொடர்ந்து பரிசோதித்து அதன் மூலம் சமூகத்தில் கிருமித்தொற்று சம்பவங்களைக் கண்டுபிடிப்பதும் தொடரும்.
“இதற்கிடையே, மீண்டும் செயல்பட முடியாத வர்த்தகங்களுக்கும் குடும்பங்களுக்கும் ஊழியர்களுக்கும் அரசாங்கம் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டும்.
“எல்லாம் எதிர்பார்த்தபடி சிறப்பாக நடந்தால், ஜூன் மாத இறுதியில் நாம் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் அடுத்த கட்டத்துக்குச் செல்லலாம். அப்போது மேலும் சில நடவடிக்கைகள் செயல்பட அனுமதிக்கப்படலாம்,” என்றும் அமைச்சர் விளக்கினார்.
நோய்ப் பரவலை முறியடிப்பதற்கான காலம் முடிந்து ஜூன் 2ஆம் தேதியன்று சில வர்த்தக சேவைகள் செயல்படுவதற்கான முதற்கட்டத்தை சிங்கப்பூர் நெருங்கிக்கொண்டிருக்கிறது.
அப்போது மக்கள் தங்கள் உடன்பிறப்புகளையும் நண்பர்களையும் சந்திக்க முடியாது. உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ணுதல் தொடர்ந்து தடை செய்யப்பட்டிருக்கும்.
“இந்த அணுகுமுறை மற்றொரு கிருமித்தொற்று அலை ஏற்படுவதைத் தடுக்க உதவும் என்றாலும் பொருளியல் நெருக்கடியை மூன்றாம் காலாண்டுக்கு இழுத்துச் சென்று மீட்சியைத் தாமதப்படுத்தும். இதனால், ஏற்கெனவே தவித்துக்கொண்டிருக்கும் வர்த்தகங்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும்,” என்று பொருளியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் கருத்துரைத்த அமைச்சர் வோங், “சமூகத்தில் கிருமித்தொற்றின் விகிகத்தைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு சிங்கப்பூர் குறைத்துள்ளது. ஆனால், கிருமித்தொற்று பிரச்சினை முற்றிலும் தீர்ந்துவிடவில்லை.
“மிகக் கடுமையான முடக்கநிலையை மேற்கொண்ட எந்த நாடும் இதுவரை கொவிட்-19 கிருமித்தொற்றை முழுமையாகத் துடைத்தொழிக்கவில்லை. முடக்கப்பட்ட தங்கள் நடவடிக்கைகளை நாடுகள் மீண்டும் திறக்கும்போது, கிருமித்தொற்று சம்பவங்கள் மீண்டும் தலையெடுத்ததைக் கண்டன.
“அதேவேளையில் மிகக் கவனமாக கட்டுப்பாடுகளைத் தளர்த்திய நாடுகளின் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள், அவசரப்பட்டு கட்டுப்பாடுகளைத் தளர்த்திய நாடுகளைக் காட்டிலும் குறைந்தே காணப்பட்டன. சிங்கப்பூரிலும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு சேவைகள் மீண்டும் திறக்கப்படும்போது, கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரிக்க வாய்ப்புண்டு,” என்று கூறிய திரு வோங், அண்மையில் பரிசோதிக்கப்பட்ட 16,000 பாலர் பள்ளி ஊழியர்களில் எட்டு பேருக்குக் கிருமித்தொற்று இருப்பது கண்டறியப்பட்டதையும் இது இன்னும் மக்களிடையே கிருமித்தொற்று சம்பவங்கள் மறைந்துள்ளன என்று காட்டுகிறது என்பதையும் சுட்டினார்.
“ஆக, எல்லா சேவைகளையும் ஒரே நேரத்தில் திறக்க முடியாது. முதலில் திறக்கப்படும் சேவைகள் பற்றி கடுமையான முடிவுகள் எடுக்கப்படும்,” என்றார் திரு வோங்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரர் ஆகுங்கள். https://tmsub.sg/online