இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் ஆறாவது முறையாக கலந்துகொண்ட ஓய்வுத்தளச் சந்திப்பில் இருநாட்டு அரசாங்கங்கள் ஆறு புரிந்துணர்பு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
இரு நாடுகளுக்கும் இடையேயான நட்புறவை பறைசாற்றும் வகையில் சிங்கப்பூர் ராணுவப் படையின் தாரை இசை முழுக்கத்துடன் திரு விடோடோ வியாழக்கிழமை (ஜனவரி 16) இஸ்தானா மாளிகையில் வரவேற்கப்பட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக இருந்த வான்வெளி நிர்வாகம், தற்காப்பில் ஒத்துழைப்பு மற்றும் தப்பியோடியவர்களை நாடுகடத்துதல் ஆகிய மூன்று விவகாரங்களுக்கு தீர்வுகாணும் வகையில் இச்சந்திப்பு அமைந்தது.
மூன்று ஒப்பந்தங்களில் ஒன்றான வான்வெளி நிர்வாக ஒப்பந்தத்தின் அடுத்த கட்ட பணிகளை நிறைவு செய்வதற்கு இந்தோனீசியாவுடன் சேர்ந்து பணியாற்ற சிங்கப்பூர் ஆவலுடன் இருப்பதாக கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் லீ குறிப்பிட்டார்.
“வெற்றிகரமான ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளைப் பிரதிபலிக்கிறது. திறந்த, ஆக்ககரமான தொடர்புகளால் கணிசமான பரஸ்பர நன்மைகளை சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் பெறலாம் என்பதையும் அவை காட்டுகின்றன,” என்றார் திரு லீ.
இதற்கிடையே வான்வெளி நிர்வாக ஒப்பந்ததின்வழி வந்த ஏற்பாடுகளை அனுமதிக்கும்படி வான்வெளி நிர்வாகத்தைக் கண்காணிக்கும் அனைத்துலக அமைப்பிற்கு சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் இணைந்து விண்ணப்பித்துள்ளன. அமைப்பு ஒப்புக்கொண்டால் எல்லா மூன்று ஒப்பந்தைகளையும் ஒரே நேரத்தில் செயல்படுத்த இரு நாடுகளும் ஒரு தினத்தைத் தேர்வு செய்யும்.
இதற்கு முன்னர், 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிந்தானில் திரு லீயும் திரு விடோடோவும் சந்தித்தபோது மூன்று உடன்பாடுகளிலும் இருநாடுகள் கையெழுத்திடுவதைப் பார்வையிட்டனர்.
வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட ஆறு ஒப்பந்தகளும் எரிசக்தி, நீடித்த நிலைத்தன்மை, சுகாதாரம், மனிதவள மேம்பாடு, மின்னிலக்க பொருளியல், பாதுகாப்பு பங்களிப்பு ஆகிய அம்சங்களைச் சார்ந்தன.
மேலும் இருநாடுகளின் பாதுகாப்பு பங்காளித்துவம் குறித்த ஒரு கூட்டு அறிவிப்பும் வர்த்தகங்களுக்கு இடையிலான சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் வியாழக்கிழமை நிகழ்வில் இடம்பெற்றன.
இரு நாட்டு தலைவர்களும் அமைச்சரவை உறுப்பினர்களுடன் சந்தித்தனர். திரு விடோடோவுடன் சேர்ந்து அவரின் அமைச்சர்களும் அமைச்சர்நிலை தகுதி பெற்ற பிரமுகர்களும் வந்தனர். திரு லீயுடன் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சர் தியோ சீ ஹியன் ஆகியோர் வந்தனர்.
சந்திப்பில் ஆசிய வட்டாரம் பற்றி கலந்துரையாடப்பட்டது. அதில் இந்தோனீசியாவின் ஆசியான் தலைமைத்துவத்திற்கு சிங்கப்பூர் முழு ஆதரவு வழங்கும் என்று பிரதமர் லீ நம்பிக்கையளித்திருந்தார்.
“மியன்மாரின் சூழ்நிலை குறித்த ஆசியானின் ஐந்து-அம்ச கருத்து இணக்கத்தில் முன்னேற்றம் இல்லாதது நமக்கு வருத்தம் தருகிறது,” என்ற திரு லீ, இந்த கருத்து இணக்கம் முழுமையாக செயல்பட இந்தோனீசியா, ஆசியான் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையோடு சிங்கப்பூர் தொடர்ந்து பணிபுரியும் என்றும் மேலும் கூறினார்.