நடுவானில் பறந்து கொண்டிருந்த போது ஹெலிகாப்டர் பழுதானது
அமெரிக்காவின் மான்ஹேட்டன் நகரில் ஹெலிகாப்டர் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்தார்.
மான்ஹாட்டன் நகரில் மேலே ஹெலிகாப்டர் ஒன்று பறந்து கொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் அதனை கீழிறக்க விமானி முயன்றார். ஆனால் கட்டுப்பாட்டை இழந்த அந்த ஹெலிகாப்டர் நகரின் நடுப்பகுதியில் உள்ள கட்டடத்தின் மேற் கூரைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.
அந்த ஹெலிகாப்டர் 10 நிமிடங்களுக்கு முன்புதான் அருகில் இருந்த ஹெலிகாப்டர் தளத்திலிருந்து புறப்பட்டிருந்தது. கட்டடத்தின் மேலே ஹெலிகாப்டர் விழுந்தபோது பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது போன்று உணர்ந்ததாக அருகில் இருந்த மக்கள் தெரிவித்தனர்.
ஹெலிகாப்டர் விழுந்த கட்டடத்தின் 29ஆம் மாடியில் பணிபுரிந்த திரு நேதன் ஹட்டன் முழு கட்டடமும் அசைந்தது என்றுந ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
"பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டுவிட்டது என நினைத்தோம். இரண்டு நிமிடங்கள் கழித்து அவசர ஒலி கேட்டது. அப்போது பாதுகாப்பு அதிகாரி உள்ளே வந்து அனைவரையும் வெளியேறும்படி கேட்டுக்கொண்டார்.
"அனைவரும் தங்கள் பைகளை எடுத்துக்கொண்டு உடனே படிகளில் கீழே இறங்கினோம். பதற்றம் இல்லை என்றாலும் அனைவரும் பல திசைகளிலிருந்தும் படிகளில் ஒன்றாக கீழே இறங்கியதால் பயமாக இருந்தது," என்று அவர் கூறினார்.
ஹெலிகாப்டர் விழுந்த வேகத்தில் தீப்பிடித்து எரிந்ததாதல் அதிலிருந்த விமானி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தைத் தொடர்ந்து குறிப்பிட்ட சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.