சீனாவின் உத்தேச நாடு கடத்தும் சட்டம் குறித்த விவாதத்தை ஹாங்காங் நாடாளுமன்றம் ஒத்திவைத்துள்ளது.
ஹாங்காங்கின் அட்மிரல்டியில் உள்ள அரசாங்கத் தலைமையகத்திற்கு வெளியிலும் நாட்டின் பிரதான சாலைகளிலும் ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் சாலை மறியல் போராட்டத்தில் இறங்கியதால் விவாதம் ஒத்திவைக்கப்பட்டது.
அரசாங்க ஊழியர்களுக்கு ஹாங்காங் அதிகாரிகள் அனுப்பிய ஆலோசனைக் குறிப்பில், நுழைவாயில்கள் மறிக்கப்பட்டுள்ளதால் அரசாங்கத் தலைமையகத்திற்கு வரவேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜனநாயகத்திற்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டம் போல ஹாங்காங் இன்று காட்சியளிக்கிறதாகத் தெரிவிக்கப்பட்டது.
பெரும்பாலும் கருப்பு ஆடைகளில், முகமூடி அணிந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர் இளையர்கள். இறும்பு சாலை தடுப்புகளை அரசாங்க மையத்திற்குச் செல்லும் முக்கிய சாலைகளின் நடுவே வைத்து கட்டடத்திற்குள் போகமுடியாதபடி செய்துள்ளனர் பொதுமக்கள்.
காலை 9மணியளவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் குரலெழுப்பத் தொடங்கினர். “கூட்டத்தை ரத்துசெய்க” என்றும் “சட்டத்தை எதிர்க்கிறோம்” என்றும் அவர்கள் கூவினர்.
சிறப்பு கவசம் அணிந்த போலிசார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது ‘பெப்பர் ஸ்பிரே’ பயன்படுத்தி கலைக்க முற்பட்டதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 9.45மணிக்கு ஆர்ப்பாட்டம் கலையத் தொடங்கியது.
அரசாங்கத் தரப்பு காலை 11 மணிக்கு விவாதக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. ஆனால் எப்போது என்று நேரம் குறிப்பிடப்படவில்லை.
சந்தேக நபர்களை ஹாங்காங்கிலிருந்து சீனாவிற்கு நாடு கடத்த இந்தச் சர்ச்சைக்குரிய சட்டம் வழிவகுக்கும்.
ஹாங்காங் அரசியல் எதிர்ப்பாளர்களை இலக்காகக் கொண்டு சீனா இந்தச் சட்டத்தை செயல்படுத்த இருப்பதாக ஹாங்காங் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமையும் ஏறத்தாழ ஒரு மில்லியன் பேர் வீதிகளில் திரண்டனர்.
இன்று விவாதம் நடத்தப்படும் என்று ஹாங்காங் தலைவர் கேரி லாம் திங்கட்கிழமை கூறியதையடுத்து இன்று ஆர்ப்பாட்டம் நடத்த பொதுமக்கள் முடிவெடுத்தனர்.