கோவன் இரட்டை கொலைகளின் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் போலிஸ் அதிகாரி, அதிபரிடம் சமர்ப்பித்திருந்த கருணை மனு நிராகரிப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதியன்று இஸ்கந்தார் ரஹ்மட், 40, வீடு ஒன்றுக்குள் புகுந்து 67 வயது வர்த்தகர் திரு டான் பூன் சின்னை பலமுறை குத்திக் கொலை செய்தார். அந்தக் கொலையைத் தற்செயலாகப் பார்த்த வர்த்தகரின் 42 வயது மகன் திரு டான் சீ ஹோங்கையும் ரஹ்மட் கொன்றார். வர்த்தகரின் காரை ஓட்டிக்கொண்டு ரஹ்மட் தப்ப முயன்றபோது அவரது மகனின் சடலம் காரின் கீழ் உடன் இழுத்துச்செல்லப்பட்டதாக இதனை நேரில் கண்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.
கருணை மனுவை ரஹ்மட்டிற்காகக் கடந்தாண்டின் முற்பகுதியில் சமர்ப்பித்த வழக்கறிஞர் பீட்டர் ஓங் லிப் செங், இது குறித்த முடிவு கடந்த மாதமே தமக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறினார்.
உரிய பரிசீலனைக்குப் பிறகு அமைச்சரவையின் ஆலோசனையின்படி மரண தண்டனையை நிலைநாட்ட அதிபர் முடிவு செய்ததாக தம்மிடம் தெரிவிக்கப்பட்டது என்று திரு ஓங் சொன்னார்.