வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகளின் தரைத்தளங்களிலும் பொது நடைபாதைகளிலும் தனிநபர் நடமாட்டச் சாதனங்களின் பயன்பாட்டை மக்கள் செயல் கட்சியின் நிர்வாகத்திலுள்ள 15 நகர மன்றங்கள் இனி அனுமதிக்காது என்று போக்குவரத்து துணையமைச்சர் லாம் பின் மின் நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார். தனிநபர் நடமாட்டச் சாதனங்களை ஓட்டுபவர்கள் அத்தகைய இடங்களுக்குச் செல்லும்போது இனிமேல் தங்கள் சாதனங்களைவிட்டு இறங்கி அவற்றைத் தள்ளியே செல்லவேண்டும்.
இதையும் படிக்க: தனிநபர் நடமாட்டச் சாதனங்களுக்கான பாதுகாப்புச் சான்றிதழ்; காலக்கெடு முன்னுக்கு கொண்டுவரப்படும்
இதற்கிடையே, பாதசாரிகள் மட்டுமே செல்லக்கூடிய இடங்களுக்கானத் திட்டத்தின் மூன்று மாதச் சோதனை நிலப்போக்குவரத்து ஆணையம் தொடங்கவுள்ளது. இத்தகைய இடங்களில் ஓட்டுநர்கள் தங்களின் சாதனங்களைவிட்டு இறங்கி அவற்றைத் தள்ளிக்கொண்டே செல்லவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாவர்.
அங் மோ கியோ, பிடோக், புக்கிட் பாத்தோக், காதீப் ஆகிய நான்கு வட்டாரங்களில் இந்தத் திட்டம் சோதனை செய்யப்படும். தெம்பனீசிலுள்ள அக்கம்பக்க நிலையம் ஒன்றிலும் இந்தச் சோதனை மேற்கொள்ளப்படும்.