ஹாங்காங்: ஜனநாயக உரிமை ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களது இயக்கத்தைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் முயற்சியாக அந்நகரின் விமான நிலையத்தை மீண்டும் முற்றுகையிட்டுள்ளனர். சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கின் ஆகப் பெரிய அரசியல் நெருக்கடியை இந்த ஆர்ப்பாட்டங்கள் ஏற்படுத்தி வருகின்றன.
விமான நிலையத்திற்குச் செல்லும் சாலைகளில் அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று கூடினர். அங்கே அவர்கள் ஜனநாயகத்திற்கு ஆதரவான பதாகைகளை ஏந்திக்கொண்டு தங்கள் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்தனர்.
சாலை போக்குவரத்து மட்டுமின்றி ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது. ‘டங் சுங்’ எம்டிஆர் ரயில் நிலையத்திற்குச் சென்றிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், இரும்புக் கழிகளால் கண்காணிப்புக் கேமராக்களை நொறுக்கி, நுழைவாயில்களைச் சேதப்படுத்தியதாக செய்தி அறிக்கைகள் கூறுகின்றன. மேலும் அவர்கள், ரயில் தண்டவாளத்தில் கற்களையும் வேறு சில பொருட்களையும் வீசி ரயில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவித்தனர். இதன் தொடர்பில் காவல்துறையினர் சிலரைக் கைது செய்துள்ளனர்.
விமான நிலைய வளாகத்தில் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர் நடந்தன. விமான நிலையத்தின் அருகே இந்த ஆர்ப்பாட்டங்கள் நடந்தால் ஹாங்காங் பற்றிய செய்திகளை வெளிநாட்டவர்கள் இன்னும் அதிகம் படிப்பர் என்பது ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலரின் நம்பிக்கை.