சிங்கப்பூரில் அவ்வப்போது புகைமூட்டம் ஏற்படலாம் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் தெரிவித்துள்ளது. இந்தோனீசியாவின் சுமத்ரா தீவிலுள்ள வெப்பமான பகுதிகளின் எண்ணிக்கை கடந்த சனிக்கிழமையின் 113இலிருந்து திடீரென மறுநாளே 333க்கு உயர்ந்ததால் சிங்கப்பூர் பாதிப்படையக் கூடும் எனக் கூறப்படுகிறது.
தென்கிழக்கு அல்லது தெற்குத் திசையிலிருந்து காற்று தொடர்ந்து வீசும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. இந்தோனீசியாவின் காட்டுத்தீப்புகையை அந்தக் காற்று சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் தள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இருந்தபோதும், சிங்கப்பூரில் அடுத்த சில நாட்களுக்குக் காற்றுத்தரம் சுமாராகவே இருக்கும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் முன்னுரைத்துள்ளது. இது குறித்த அண்மைய அறிவிப்புகளை வாரியம் தனது இணையத்தளத்தில் தேவைப்படும்போது வெளியிடும்.
திங்கட்கிழமை காலை பத்து மணி நிலவரப்படி, 24 மணிநேர தூய்மைக் கேட்டுத் தரக் குறியீடு 71க்கும் 79க்கும் இடையே மிதமான அளவில் இருந்தது. இது நேற்று மாலையில் பதிவான ‘63-69’ அளவைக் காட்டிலும் அதிகம்.