மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது புகைமூட்டம் குறித்து இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவுக்குக் கடிதம் எழுதப்போவதாகத் தகவல் வெளிவந்துள்ளது. மலேசியாவில் மோசமாகிக் கொண்டிருக்கும் காற்றுத்தரம் குறித்து டாக்டர் மகாதீரிடம் தாம் பேசியதாக அந்நாட்டின் எரிபொருள், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சர் இயோ பீ யின் தெரிவித்தார். தாம் பிரதமரிடம் பேசிய பிறகு அவர் இந்த விவகாரம் குறித்து இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவுக்குக் கடிதம் எழுத இசைந்ததாகத் திருவாட்டி இயோ கூறினார்.
ஜோகூரில் செய்தியாளர்களிடம் உரையாடிய திருவாட்டி இயோ, ஆசியான் சிறப்பு வானிலை ஆய்வக நிலையத்தின் தரவுகளை மேற்கோள் காட்டி, நேற்று முன்தினம் வெளியிட்ட தமது ஃபேஸ்புக் பதிவைத் தற்காத்துப் பேசினார். மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் மக்களுக்குச் சுகாதாரக் கெடுதல்களை ஏற்படுத்தும் புகைமூட்டம் இந்தோனீசியாவில் மூளும் காட்டுத்தீக்களிலிருந்து வருவதை அந்தத் தரவுகள் காட்டுவதாக அவர் கூறினார்.
“கலிமந்தானிலும் சுமத்திராவிலும் காட்டுத்தீ பிரச்சினையை எதிர்கொள்ள இந்தோனீசிய அரசு தனது வளங்களை அதிகப்படுத்தவேண்டும் என சுற்றுப்புற அமைச்சராகிய நான் விரும்புகிறேன். இந்தோனீசியா, தனது மண்ணில் நிகழும் காட்டுத்தீச்சம்பவங்களுக்குப் பொறுப்பேற்கவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்,” என்றும் அவர் கூறினார்.
இந்தோனீசியா புகைமூட்டத்தை ஏற்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டும் ஆர்ப்பாட்டக் கடிதத்தை மலேசியா அனுப்பியிருந்ததாக இந்தோனீசிய சுற்றுப்புற, வனத்துறை அமைச்சர் சித்தி நூர்பயா பக்கார் ஊடகங்களிடம் முன்னதாகத் தெரிவித்தார். ஆனால் தம் நாடு, அத்தகைய ஆர்ப்பாட்டக் கடிதத்தை அனுப்பவே இல்லை என்று இந்தோனீசியாவுக்கான மலேசியத் தூதர் ஸைனால் அபிடின் பக்கார் தெரிவித்தார். காட்டுத்தீப் பிரச்சினையைக் கட்டுப்படுத்த இந்தோனீசியாவுக்கு மலேசியா முன்வந்து உதவத் தயார் என்பதைக் குறிக்கும் கடிதம்தான் அனுப்பப்பட்டிருந்ததாக அவர் கூறினார்.
நேற்று கலிமந்தானில் வெப்ப மையங்களின் எண்ணிக்கை நேற்றைய முன்தினத்தின் 474லிருந்து 1,188க்கு அதிகரித்துள்ளது.