சிங்கப்பூரின் புகைமூட்டம் நேற்று மோசமடைந்தது. பிஎஸ்ஐ என்னும் காற்றுத் தரக் குறியீடு நேற்று மூன்றாண்டுகளில் முதன்முறையாக ஆரோக்கியமற்ற அளவைக் கடந்தது. 24 மணி நேரத்திற்கான குறியீட்டின் அளவு மாலை 6 மணியளவில் 88க்கும் 106க்கும் இடைப்பட்டு இருந்தது. சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில்தான் இந்த அளவுக்கு ஆரோக்கியமற்ற குறியீடு பதிவானது.
101க்கும் 200க்கும் இடைப்பட்ட குறியீடு ஆரோக்கியமற்றதாக வகைப்படுத்தப்படுவதால் பொதுமக்கள் தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ளுமாறு தேசிய சுற்றுப்புற வாரியம் கேட்டுக்கொண்டது. அடுத்த 24 மணி நேரத்திற்கான காற்றுத் தரக் குறியீட்டின் நிலவரத்தையும் அது மதிப்பிட்டது. மிதமான அளவின் உச்சத்திற்கும் ஆரோக்கியமற்ற நிலவரத்தின் கீழ்மட்டத்திற்கும் இடைப்பட்டதாக இருக்கும் என்று வாரியம் கணித்தது. சுமத்ராவிலிருந்து சிங்கப்பூரை நோக்கி புகைமூட்டம் பரவி வருவது நேற்றைய நிலைமைக்குக் காரணமாகச் சொல்லப்பட்டது.
மேற்குப் பகுதியில் வானில் படர்ந்த புகைமூட்டத்தினால் சிங்கப்பூர் வனவியல் பூங்கா, ஜூரோங் பறவைப் பூங்கா ஆகியவற்றைக் காணச் சென்ற சுற்றுப் பயணிகள் சிரமமடைந்ததாகக் கூறப்பட்டது.
ஜப்பானிலிருந்து இங்கு வந்திருந்த கென் சுஜிரோ, 39, என்பவரும் அவரது குடும்பத்தினரும் மண்டாய் வனவியல் பூங்கா, ரிவர் சஃபாரி ஆகியவற்றைக் காணத் திட்டமிட்டு இருந்தனர். வனவியல் பூங்காவைக் கண்டுகளித்துக் கொண்டிருந்தபோது சூட்டோ என்னும் தமது நான்கு வயது மகனுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக சுஜிரோ கூறினார். அவரது மகனுக்கு ஏற்கெனவே ஆஸ்துமா பாதிப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
நேற்றுக் காலை படரத் தொடங்கிய புகைமூட்டம் பிற்பகல் கடந்து மாலையிலும் தொடர்ந்தது.
பிற்பகல் 3 மணியளவில் காற்றுத் தரக் குறியீட்டின் அளவை 98க்கு உயர்த்தியது தேசிய சுற்றுப்புற வாரியம். பின்னர் அது படிப்படியாக அதிகரித்து 100ஐக் கடந்து ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது.