ஸ்ரீ நாராயண மிஷன் நேற்று அதன் சதயம் விழாவைக் கொண்டாடியது. அதில் கலந்துகொண்டு பேசிய துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட், ஒரு காலத்தில் வெறும் மண்குடிசைகளாக இருந்த சிங்கப்பூர் தற்பொழுது விண்ணை முட்டும் கட்டடங்களையும் நவீன பொது வீடமைப்பையும் கொண்டிருப்பதைச் சுட்டி, இவற்றை அரசாங்கத்தால் மட்டுமே உருவாக்கியிருக்க முடியாது என்றும் இதில் அனைவருக்கும் பங்கு உள்ளது என்றும் கூறினார்.
சிங்கப்பூர் அரசாங்கம் உங்களுக்குப் பணி செய்வதற்காக மட்டுமல்ல. மாறாக, உங்களுடன் இணைந்து நம் அனைவருக்கும் உரிய எதிர்காலத்தை உருவாக்குவதில் அரசு கடப்பாடு கொண்டுள்ளது. ஸ்ரீ நாராயண மிஷன் இல்லத்தின் சமூக, பங்காளித்துவ உணர்வுகளை மேலும் பல சிங்கப்பூரர்கள் பிரதிபலிப்பர் எனத் தாம் நம்புவதாக துணைப் பிரதமர் ஹெங் தெரிவித்தார். இதன் தொடர்பில் சிங்கப்பூரர்கள் திறந்த மனதுடன் தங்கள் யோசனைகளை அரசின் முன்வைத்து அவை செயல்வடிவம் பெற அரசுடன் இணைந்து பணியாற்றுமாறு அவர் அறைகூவல் விடுத்தார்.
முன்னதாக, 1960களில் நடமாடும் உணவுத் திட்டம், துணைப் பாட வகுப்புத் திட்டம், வசதி குறைந்த பிள்ளைகளுக்கு கல்வி உதவி நிதி போன்ற பல்வேறு நலத்திட்டங்களுடன் தனது சேவையைத் தொடங்கிய நாராயண மிஷன், பின்னாட்களில் நீண்டகால தாதியர் இல்லமாக, இரண்டு முதியோர் இல்லங்களைக் கொண்ட, சமுதாயத்தில் கைவிடப்பட்டோருக்குப் பராமரிப்பு சேவைகள் வழங்கி அவர்களுக்கென புதிய
வாழ்க்கையை அமைத்துத் தந்த ஓர் அமைப்பாக எழுச்சி கண்டதை திரு ஹெங் விளக்கினார்.
இதில் பல இனத்தாரையும் அரவணைக்கும் சமூக உணர்வு, தேவையுள்ளோருக்கு உதவிக்கரம் நீட்டும் பங்காளித்துவ உணர்வு ஆகியவற்றைக் கொண்டிருக்கும் ஸ்ரீ நாராயண மிஷனின் பண்புநெறிகள் நமது சமுதாயத்துக்கு மிகவும் தேவையானவை என்று அவர் கருத்துரைத்தார்.
அந்தப் பண்புநெறிகளைப் பட்டியலிட்ட அவர், அதில் முதலாவதாக, அனைவரையும் இன, மொழி, சமய வேறுபாடின்றி பரிவுடன் பராமரிக்கும் அதன் சேவையைப் பாராட்டினார். இதில் இல்லத்தின் கல்வி உதவி நிதி இந்திய மாணவர்களை மட்டுமின்றி சீன, மலாய் சமூக மாணவர்களுக்கும் பயனளித்திருப்பதை அவர் நினைவுகூர்ந்தார்.
இரண்டாவதாக, இல்லத்தின் பங்காளித்துவ உணர்வைப் பாராட்டிய அமைச்சர், ஸ்ரீ நாராயண மிஷன் இல்லம் அரசு அமைப்புகள், நிறுவனங்கள், சமூக அமைப்புகள், ஆகிய வற்றின் மூலம் பயனாளிகளுக்கு நிறைவான சேவையை வழங்குகிறது என்றார். இதன் தொடர்பில் மேலும் அதிகமான சிங்கப்பூரர்கள் இந்த பங்காளித்துவ முறையின் அடிப்படையில் பொதுவான இலக்குகளை அடைய பணியாற்றலாம் என்று துணைப் பிரதமர் ஹெங் கூறினார்.
அனைவரும் ஒன்றிணைந்தால் நமக்கும் வருங்கால சந்ததியினருக்கும் மேலும் சிறப்பான சிங்கப்பூரை உருவாக்கலாம் என்று திரு ஹெங் கூறி முடித்தார்.