வீட்டின் திண்ணையில் அமர்ந்து காற்று வாங்கிய மூதாட்டி, சென்ற வெள்ளிக்கிழமை இரவு துப்பாக்கிக் குண்டு பாய்ந்து மாண்டார்.
ஜோகூர் பாருவில் உள்ள ஜாலான் துன் அமினா பகுதியில் இருக்கும் தம் மகனின் வீட்டில் தங்கியிருந்த 78 வயது திருவாட்டி இந்திராணி, இரவு உணவிற்குப் பின் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். அப்போது அவருடைய மகன் கணேசன், 57, மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நால்வரும் வீட்டின் உள்ளே இருந்தனர்.
திடீரென்று உரத்த சத்தம் தொடர்ச்சியாக ஒலித்தது என்றும் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள்தான் சத்தத்தை எழுப்புகிறார்கள் என்றும் அனைவரும் நினைத்ததாக ‘த ஸ்டார்’ நாளிதழ் குறிப்பிட்டது. ஆனால் கடைசியாக இருமுறை ஒலித்த குண்டுச் சத்தம் மிகவும் பயங்கரமாக இருந்ததாகவும் அண்டைவீட்டார் அலறும் சத்தம் கேட்டதாகவும் கணேசன் கூறினார்.
முன்வாசல் கதவைத் திறந்த கணேசன், தம் தாயார் தலையில் குண்டு பாய்ந்து, ரத்த வெள்ளத்தில் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அத்துடன் ஒரு கொள்ளைக்காரன் பக்கத்து வீட்டுக்காரரை நோக்கித் தன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டி அவரது மோட்டார் சைக்கிளை வாங்கிய காட்சியையும் கண்டு கணேசனும் அவரின் குடும்பத்தாரும் உறைந்துபோயினர்.
கொள்ளைக்காரன் இன்னொரு நபருடன் அந்த மோட்டார் சைக்கிளில் தப்பித்துச் சென்றதாகக் கூறப்பட்டது. வேறு ஒரு வீட்டில் கொள்ளை அடிக்கும் முயற்சி கைகூடாமல் போக, தப்பித்துச் சென்றுகொண்டிருந்த கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டபோது குண்டு தவறுதலாக திருவாட்டி இந்திராணிமீது பாய்ந்ததாக போலிசார் கூறினர்.