சிராங்கூன் கார்டன்ஸ் பகுதியில் ஸிக்கா கிருமியால் மூவர் பாதிக்கப்பட்டுள்ளதை தேசிய சுற்றுப்புற வாரியம் கடந்த வெள்ளிக்கிழமை உறுதி செய்தது. ஹெம்ஸ்லி அவென்யூவில் அவர்களுக்கு ஸிக்கா கிருமி தொற்றியது.
இந்நிலையில், ஸிக்கா கிருமித் தொற்று அதிகம் ஏற்படும் பகுதியாக சிராங்கூன் கார்டன்ஸ் அடையாளம் காணப்பட்டிருப்பது தங்களுக்கு கவலை அளித்தாலும் அதற்கு முன்னதாகவே தாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள் கூறியுள்ளனர்.
ஸிக்கா கிருமித் தொற்று பகுதி மீண்டும் உருவெடுத்திருப்பது தங்களுக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என்று கிருமித் தொற்று நிபுணர்கள் கருத்துரைத்தனர். ஆயினும், இங்கு பரவலான கிருமித் தொற்று ஏற்படுவது அவ்வளவாக சாத்தியமில்லை என்று அவர்கள் கூறினர். கடைசியாக 2017ஆம் ஆண்டு ஜூலையில் ஸிக்கா கிருமித் தொற்று பகுதியாக சிராங்கூன் கார்டன்ஸ் அடையாளம் காணப்பட்டது. இவ்வாண்டு ஸிக்கா கிருமியால் 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிராங்கூன் கார்டன்ஸ் பகுதியில் உள்ள பிரிட்போர்ட் அவென்யூ, காவ்டிரே அவென்யூ, ஹடிங்டன் அவென்யூ, போர்ட்செஸ்டர் அவென்யூ, டெவிஸ்டோக் அவென்யூ ஆகிய வட்டாரங்களில் எட்டுப் பேருக்கு டெங்கி தொற்றிருப்பதாகக் கடந்த மாதம் தெரியவந்தது. அந்த டெங்கி தொற்று இடங்களுக்கு அருகே இப்போது ஸிக்கா கிருமித் தொற்று இடம் அமைந்துள்ளது. அந்த வட்டாரங்களில் தரைவீடுகளே அதிகம் உள்ளன.
ஸிக்கா கிருமியும் டெங்கியும் ‘ஏடிஸ்’ கொசுவால் பரவுகின்றன. ஒன்றோடு ஒன்று 150 மீட்டர் தூர தொலைவில் உள்ள இடத்தில் இரு வார காலகட்டத்தில் இரண்டு அல்லது அதற்கும் அதிகமான பேர் பாதிப்படையும்போது கிருமித் தொற்றும் இடமாக அது அடையாளம் காணப்படுகிறது.