ஹாங்காங் தலைவர் கேரி லாம் தமது வருடாந்திரக் கொள்கை உரை நேற்று நிகழ்த்த இருந்தபோது எதிர்க்கட்சியினர் கத்தி, ஆர்ப்பாட்டம் செய்ததால் நாடாளுமன்றத்தில் பதற்றம் நிலவியது.
திருவாட்டி லாம்மின் மூன்றாவது வருடாந்திரக் கொள்கை உரை வீடமைப்பு, மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் உரையாற்ற இருந்த திருவாட்டி லாமை நோக்கி அவருக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளைக் காட்டி எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். மெய்க்காப்பாளர்களின் உதவியுடன் நாடாளுமன்றத்தைவிட்டு வெளியேறிய திருவாட்டி லாமால் அங்குள்ள அறை ஒன்றில் இருந்தவாறு சில வினாடிகளுக்கு மட்டுமே பேச முடிந்தது. எதிர்க்கட்சியினர் தொடர்ந்து சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர்.
அமைதி காக்கும்படி சட்டமன்றத் தலைவர் ஆண்ட்ரு லியூங் கேட்டுக்கொண்டதை அடுத்து கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் கழித்து திருவாட்டி லாம் உரையாற்ற தயாரானார்.
ஆனால் எதிர்க்கட்சியினர் மீண்டும் இடையூறு விளைவிக்க உரை தடைப்பட்டது. நாட்டின் தலைவரை உரையாற்றவிடாமல் தொந்தரவு செய்த பல சட்டமன்ற உறுப்பினர்களை நாடாளுமன்றத்தைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர்கள் அதற்குப் பணியவில்லை.
இதையடுத்து, திருவாட்டி லாம்மின் வருடாந்திரக் கொள்கை உரை காணொளி மூலம் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது.
திருவாட்டி லாமின் உரையை தொலைக்காட்சி அல்லது கொள்கை உரை இணையப்பக்கத்தில் பொதுமக்கள் பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஹாங்காங்கில் பிரிட்டிஷ் ஆட்சி முடிவுக்கு வந்ததும் ஒரே நாடு இரு ஆட்சிமுறை என்ற அணுகுமுறையைப் பயன்படுத்தி அந்நாட்டை சீனா நிர்வாகம் செய்து வருகிறது.
இந்த அணுகுமுறையில் தாம் கடப்பாடு கொண்டிருப்பதாக திருவாட்டி லாம் வலியுறுத்தினார்.
சீனாவிடமிருந்து பிரிந்து ஹாங்காங் தனிநாடாக வேண்டும் என்ற அழைப்புகள் சகித்துக் கொள்ளப்படாது என்றார் அவர். வீடமைப்பு, உள்கட்டமைப்புக் கொள்கைகள் பற்றி திருவாட்டி லாம் பேசினார்.
ஹாங்காங் எதிர்நோக்கும் வீடமைப்பு பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்றார் அவர். உரையாற்றிய பிறகு திருவாட்டி லாம் செய்தியாளர் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
ஹாங்காங்கில் கடந்த சில மாதங்களாக அரசாங்கத்தை எதிர்த்து வன்முறை போராட்டங்கள் நடந்து வருகின்றன.
ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளைப் பற்றி தமது உரையின்போது பேசாமல் நழுவிவிட்டதாக திருவாட்டி லாமை செய்தியாளர்கள் சிலர் குறைகூறினர். இதற்குத் திருவாட்டி லாம் மறுப்பு தெரிவித்தார்.
தேர்தல் சீர்திருத்தம் குறித்து முடிவெடுக்கும் நேரம் இதுவல்ல என்று குறிப்பிட்ட திருவாட்டி லாம் சீனாவின் குறுக்கீடு இல்லாமல், ஹாங்காங்கில் பேச்சுரிமை, ஊடகச் சுதந்திரம் ஆகியவை தொடர்ந்து நடப்பில் இருப்பதாகக் கூறினார்.
இதற்கிடையே, ஹாங்காங் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அமெரிக்கா மசோதா ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த சீனா தனது விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று அமெரிக்காவை எச்சிரித்துள்ளது.