உயர்ந்துவரும் கடல் மட்டத்தால் உலகின் சில முக்கியமான கடற்கரை நகரங்கள் 2050ஆம் ஆண்டுக்குள் கடலுக்குள் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் இந்தியாவின் மும்பையும் அந்தப் பட்டியலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இந்தக் காலகட்டத்தில் முன்பு எதிர்பார்த்ததைவிட மும்மடங்கு மக்கள் பாதிக்கப்படுவர் என்றும் கூறப்படுகிறது. கடல் மட்டம் உயர்வதால் ஏற்படும் தாக்கங்களைத் துல்லியமாகக் கணக்கிடும் முறை நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளது என்றும் அதனடிப்படையில் இந்தக் கருத்துகள் வெளியாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நூற்றாண்டின் மத்திக்குள் கடலுக்குள் மூழ்கும் அபாயத்தில் உள்ள நிலப்பகுதிகளில் சுமார் 150 மில்லியன் மக்கள் வசித்துவருவதாக அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது. தெற்கு வியட்நாமின் கடற்கரைப் பகுதி கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதால் அந்தப் பகுதிகளில் வசிக்கும் 20 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவர். இந்த எண்ணிக்கை வியட்நாமின் மக்கள் தொகையில் கால்வாசிக்கும் அதிகம்.
வியட்நாமின் பொருளியல் மையமாக விளங்கும் ஹோ சி மின் நகரமும் மூழ்கும் என்று ஆய்வு தெரிவிக்கிறது. நியூஜெர்சியில் அமைந்துள்ள ‘கிளைமேட் சென்ட்ரல்’ எனும் அறிவியல் அமைப்பு மேற்கொண்ட இந்த ஆய்வின் அறிக்கை ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்’ எனும் சஞ்சிகையில் வெளியானது. எதிர்கால மக்கள்தொகை வளர்ச்சி, கடல் அரிப்பால் இழக்கப்படும் நிலம் ஆகியவை இந்தக் கணிப்பில் கணக்கில் கொள்ளப்படவில்லை.
துணைக்கோள்களின் படங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் அளவீடுகளால் உண்மையான தள நிலையைக் கணக்கிட முடிவதில்லை என்று ஆய்வாளர்களில் ஒருவரான டாக்டர் ஸ்காட் கல்ப் கூறினார். அதனால், ‘கிளைமேட் சென்ட்ரல்’ அமைப்பின் தலைமை நிர்வாகி டாக்டர் பெஞ்சமின் ஸ்ட்ராஸ் உடன் இணைந்து ஸ்காட் மேற்கொண்ட ஆய்வில் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்பட்டது.
வரும் 2050ஆம் ஆண்டுக்குள் கடலுக்குள் மூழ்கக்கூடிய சாத்தியமுள்ள தாய்லாந்தின் நிலப்பகுதிகளில் வசிப்போர் அந்நாட்டு மக்கள் தொகையில் சுமார் 10% என்று கூறப்படுகிறது. தாய்லாந்தின் தலைநகரான பேங்காக் நகரமும் அந்தப் பட்டியலில் உள்ளது. இந்த நகரங்கள் கடலில் மூழ்குவதைத் தடுக்க கூடியவிரைவில் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று கூறிய டாக்டர் ஸ்ட்ராஸ், அத்தகைய நடவடிக்கைகளின் பலனும் எல்லைக்குட்பட்டதாகவே இருக்கும் என்று கூறியுள்ளார்.