இளம் சிங்கப்பூரர்கள் தோட்டக்கலையில் ஈடுபட கூடுதல் வாய்ப்புகளைப் பெறவுள்ளனர்.
பாலர் பள்ளி முதல் உயர் கல்வி நிலையங்கள் வரை பயிலும் மாணவர்களிடையே பசுமையையும் சுற்றுச்சூழலையும் பற்றிய புரிந்துணர்வை அதிகரிக்க சில திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தேசிய பூங்காக் கழகமும் ‘அவுட்வர்ட் பவுண்ட் சிங்கப்பூர்’ உள்ளிட்ட சில பங்காளிகளும் இணைந்து இந்தத் திட்டங்களை உருவாக்குகின்றன.
இந்தப் புதிய திட்டங்களின் ஓர் அங்கமாக தோட்டக்கலை மீதும் பசுமை மீதும் ஆர்வம் உள்ள இளம் சிங்கப்பூரர்களை ஈடுபடுத்த புதிய ‘கிரீன் ஃபிரென்ட்ஸ்’ கருத்தரங்கு தொடங்கப்படும்.
தற்போதைய “பயோடைவர்சிட்டி ஃபிரெண்ட்ஸ்” கருத்தரங்குடன் இந்தப் புதிய முயற்சியும் இளையர்களை உயிரியல் பன்முகத்தன்மை, விலங்கு நிர்வாகம், பசுமை ஆகியவற்றுடன் தொடர்புடைய சமூகத் திட்டங்களில் ஈடுபடுத்துவதற்கான வாய்ப்புகளை நல்கும் என்று துணைப்பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்திருக்கிறார்.
ஜுரோங் ஏரி பூந்தோட்டத்தில் இன்று நடைபெற்ற சமூகத் தோட்டத் திறப்பு விழாவில் திரு ஹெங் இவ்வாறு கூறினார்.
“இயற்கைக்கான இளையப் பொறுப்பாளர்கள்” (Youth stewards for nature) என்ற திட்டம் நிலத் தோற்றமைப்பு, தாவரவியல், இயற்கைச் சூழலியல் ஆகியவற்றிலுள்ள சவால்களைக் கையாள இளையர்களை ஈடுபடுத்துகிறது. இத்திட்டத்தின்கீழ் பசுமை சார்ந்த திட்டங்களை உருவாக்குவதிலும் செயல்படுத்துவதிலும் இளையர்களுக்கு தேசிய பூங்காக் கழக ஊழியர்களும் பங்காளிகளும் உதவுவர்.
தோட்டக்கலை, நிலத்தோற்ற வடிவமைப்பு, இயற்கைச் சூழலியல், விலங்கு மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சேர விரும்பும் வசதி குறைந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவி வழங்கப்படும் என்று திரு ஹெங் தெரிவித்தார்.
இதற்காகவே பெருஞ்செல்வந்தர் பீட்டர் லீம், பூங்காக் கழகத்தின் பூந்தோட்ட நகர நிதியத்திற்கு 10 மில்லியன் வெள்ளி நன்கொடை அளித்துள்ளார்.