நொவீனாவிலுள்ள கட்டுமானத் தளத்தில் பாரந்தூக்கி விழுந்ததை அடுத்து ஊழியர் ஒருவர் மரணம் அடைந்திருக்கிறார். ஜாலான் டான் டோக் செங்கிலுள்ள கட்டுமானத் தளத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில் காயமடைந்த மற்றோர் ஊழியர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்கு இன்று காலை சுமார் 8.50 மணிக்கு உதவிக்கான அழைப்பு கிடைத்தது.
கட்டுமானத் தளத்தில் பாரந்தூக்கி இடிந்து விழுந்ததில் ஆடவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்த மருத்துவ அதிகாரி தெரிவித்தார்.
மற்றோர் ஊழியர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மாண்டவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும் காயமடைந்த மற்றொருவர் பங்ளாதேஷி என்றும் கட்டுமானத் தளத்தில் இருந்த ஊழியர்கள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தனர். அந்த பங்ளாதேஷி ஊழியர் காலில் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பந்தப்பட்ட பாரந்தூக்கி 300 கிலோகிராம் எடையுள்ள சாரக்கட்டை ஏற்றி அதனை நகர்த்திக்கொண்டிருந்தபோது திடீரென்று அந்த பாரந்தூக்கி அந்த இரண்டு ஆடவர்களின்மீது விழுந்தது.
“பல டன் எடையுள்ள பொருட்களைத் தூக்க முடிந்த அந்த பாரந்தூக்கிக்கு 300 கிலோகிராம் மிக இலகுவாக இருக்கிறது,” என்று தனது பெயரை வெளியிட விரும்பாத ஓர் ஊழியர் கூறினார்.
இறந்த இந்திய ஆடவர் எல்கேடி கான்ட்ரெக்டர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்றும் காயமடைந்த ஊழியர் பிஎச்சிசி கன்ஸ்டிரக்ஷன்ஸைச் சேர்ந்தவர் என்றும் மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தத் தளத்தில் டான் டோக் செங் மருத்துவமனையின் புதிய 17 மாடிக் கட்டடம் கட்டப்படவுள்ளது. இதில் 500 படுக்கைகளைக் கொண்ட மறுவாழ்வு வளாகம் அமைக்கப்படும். மார்ச் 2017ஆம் ஆண்டில் தொடங்கிய கட்டுமானப் பணிகள் 2022ஆம் ஆண்டுக்குள் நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது.