துணைப்பிரதமரும் நிதியமைச்சருமான ஹெங் சுவீ கியட் இன்று தமிழ் முரசு அலுவலகத்திற்கு சிறப்பு வருகை அளித்தார். அவருடன் தொடர்பு தகவல் அமைச்சர் எஸ். ஈஸ்வரன், மனிதவள துணையமைச்சர் ஸாக்கி முகம்மது ஆகியோரும் வந்திருந்தனர்.
தீபாவளி முறுக்கு சாப்பிட்டு மகிழ்ந்த திரு ஹெங்கும் மற்ற இரண்டு அமைச்சர்களும் தமிழ் முரசு ஊழியர்களுடன் உறவாடி, 85 ஆண்டுகள் பழமையான தமிழ் முரசு பத்திரிகையைப் பற்றி மேலும் தெரிந்துகொண்டனர். அத்துடன் தமிழ் முரசின் புதிய இணையத்தளம், அதன் செயல்பாடுகள், அதிகரித்து வரும் வாசகர் எண்ணிக்கை, செய்திக்குழுவினரின் பணிகள் ஆகியவை குறித்தும் அவர்களிடம் விளக்கப்பட்டது.
திரு ஹெங், திரு ஈஸ்வரன், திரு ஸாக்கி ஆகியோர் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ்ஸில் உள்ள பெரித்தா ஹரியன், சீன ஊடகக் குழுமம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஆகிய பிரிவுகளின் அலுவலகங்களையும் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள், தமிழ் முரசு மற்றும் பெரித்தா ஹரியானின் இளம் செய்தியாளர்களுடன் பிரத்தியேக உரையாடலில் கலந்துகொண்டனர். தமிழ், மலாய் செய்தி ஊடகங்கள் எதிர்நோக்கும் தனித்தன்மை வாய்ந்த சவால்கள், பொய்ச்செய்திகளின் தாக்கம், செய்தித்துறையாளர்களின் தர்மம், சிங்கப்பூரர்களின் மொழி அடையாளம் உள்ளிட்டவற்றின் தொடர்பில் அந்த அமைச்சர்கள், செய்தியாளர்களுடன் கலந்துரையாடினர்.
- செய்தி: கி. ஜனார்த்தனன்