சிங்கப்பூரில் உள்ள அனைத்து குடிநுழைவு சோதனைச்சாவடிகளிலும் 2025ஆம் ஆண்டுக்குள் கைரேகை, முக அடையாளம், கண் ஆகியவற்றை 'ஸ்கேன்' செய்து தானியக்க குடிநுழைவு சோதனை முறை கடைப்பிடிக்கப்படும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த சிங்கப்பூர் மேற்கொள்ளும் முயற்சியின்கீழ் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
சமூக, பொருளியல் ரீதியில் அனுகூலங்களைப் பெற இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
புதிய தேசிய செயற்கை நுண்ணறிவு உத்தியைத் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் இன்று (நவம்பர் 13) அறிமுகப்படுத்தினார். அதில் ஐந்து முக்கிய தேசிய செயற்கை நுண்ணறிவுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
எல்லைப் பாதுகாப்பைத் தவிர்த்து தளவாடம், சுகாதாரப் பராமரிப்பு, கல்வி, குடியிருப்புப் பேட்டை நிர்வாகம் ஆகியவை செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களில் அடங்கும்.
“புதிய தொழில்நுட்பங்கள் பற்றி நாடுகள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பொதுவான சவால்களை எதிர்கொள்ள அவற்றைப் பயன்படுத்த வேண்டும்,” என்றார் திரு ஹெங்.
சுகாதாரப் பராமரிப்புக்காக சிங்கப்பூரின் அனைத்துப் பகுதிகளிலும் 2022ஆம் ஆண்டுக்குள் செலினா+ எனப்படும் செயற்கை நுண்ணறிவு முறை பயன்படுத்தப்படும்.
கண்களில் ஏற்படும் கோளாறுகளை இந்த முறை தற்போதுள்ள முறையைவிட இன்னும் அதிகமாகவும் துல்லியமாகவும் கண்டுபிடிக்க உதவும்.
இத்துடன், செயற்கை நுண்ணறிவு முறையைக் கொண்டு குடியிருப்புப் பேட்டை நிர்வாகத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளை முன்னுரைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
கல்வியைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட சில ஆங்கில மொழிப் பயிற்சிகளைத் திருத்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.
அறிவார்ந்த தேசம், மின்னிலக்க அரசாங்க அலுவலகத்தின்கீழ் புதிய தேசிய செயற்கை நுண்ணறிவு அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது.
ஆய்வு, புத்தாக்கம், நிறுவனம் 2020 திட்டத்தின்கீழ் செயற்கை நுண்ணறிவு உட்பட மின்னிலக்கத் தொழில்நுட்பங்களுக்காக சிங்கப்பூர் $500 மில்லியன் முதலீடு செய்ய இருக்கிறது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity