தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (பிஎஸ்எல்இ) முடிவுகள் அடுத்த வியாழக்கிழமை (நவம்பர் 21) வெளியாக உள்ளன.
அன்றைய தினம் காலை 11 மணி முதல் தங்களது பள்ளிகளில் மாணவர்கள் தேர்வு முடிவுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
தகுதிபெறும் மாணவர்களுக்கு உயர்நிலைப் பள்ளிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான படிவமும் வழங்கப்படும் என கல்வி அமைச்சு இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
படிவத்தில் காணப்படும் தனிப்பட்ட அடையாள எண்ணைக் கொண்டு இணையம் வழியாக உயர்நிலைப் பள்ளித் தெரிவை விண்ணப்பிக்கலாம்.
அன்றைய தினம் காலை 11 மணி முதல் இம்மாதம் 27ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள்ளாக தெரிவை இணையம் வழியாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
நவம்பர் 21 அன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை, நவம்பர் 22, 25, 26, 27 தேதிகளில் காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை நேரடியாக தங்களது தொடக்கப்பள்ளிகளிலும் இந்தப் படிவத்தை மாணவர்கள் சமர்ப்பிக்கலாம்.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட உயர்நிலைப் பள்ளி பற்றிய விவரங்களை அடுத்த மாதம் 20ஆம் தேதி குறுந்தகவலாகவோ, இணையம் வழியாகவோ தங்களது தொடக்கப்பள்ளி வாயிலாகவோ மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.
டிசம்பர் 23ஆம் தேதி காலை 8.30 மணிக்கு மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட உயர்நிலைப் பள்ளிக்குச் செல்ல வேண்டும்.
இது குறித்த மேல் விவரங்களுக்கு என்ற இணையப்பக்கத்தை நாடலாம்.
கிரெஸ்ட் உயர்நிலைப் பள்ளி, ஸ்பெக்ட்ரா உயர்நிலைப் பள்ளி ஆகிய சிறப்புப் பள்ளிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அந்தப் பள்ளிகளில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
தொடக்கப்பள்ளிகளிலோ, இந்த இரண்டு உயர்நிலைப் பள்ளிகளின் இணையப்பக்கத்திலோ விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
இவற்றில் சேரத் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு டிசம்பர் 13ஆம் தேதிக்குள்ளாக தகவல் அளிக்கப்படும்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity