இவ்வாண்டு ‘பிஎஸ்எல்இ’ தேர்வு எழுதிய தொடக்கநிலை 6ஆம் வகுப்பு மாணவர்களில் 98.4 விழுக்காட்டினர் உயர்நிலைப் பள்ளிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
நான்காவது ஆண்டாக இந்தத் தேர்ச்சி விகிதம் தொடர்கிறது. கல்வி அமைச்சு நேற்று இந்த விவரங்களை வெளியிட்டது.
இந்த மொத்தம் 40,256 மாணவர்கள் தொடக்கப்பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வை (பிஎஸ்எல்இ) எழுதினர்.
இவர்களில் 39,622 மாணவர்கள் அடுத்த கட்டமாக உயர்நிலைப் பள்ளிகளுக்குச் செல்கின்றனர் என்று கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வு, மதிப்பீட்டுக் கழகமும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தன.
ஆனால் 634 மாணவர்கள் இவ்வாண்டின் ‘பிஎஸ்எல்இ’ தேர்வில் தேர்ச்சி பெறவில்லை.
இவர்கள் மறுபடியும் இந்தத் தேர்வை எழுதலாம் அல்லது அசம்ஷன் பாத்வே பள்ளிக்கும் நார்த்லைட் பள்ளிக்கும் விண்ணப்பிக்கலாம்.
“ஒரு முறை பிஎஸ்எல்இ தேர்வு எழுதிய மாணவர்கள் அசம்ஷன் பாத்வே பள்ளி அல்லது நார்த்லைட் பள்ளிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் தங்களுடைய பள்ளி முதல்வரின் பரிந்துரையைக் கேட்டு அவ்வாறு செய்யலாம்,” என்று அந்தக் கூட்டு அறிக்கை தெரிவித்தது.
உயர்நிலைப் பள்ளிக்குத் தகுதி பெற்ற மாணவர்கள் இணையம் வழியாக உயர்நிலை 1ஆம் வகுப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த இணையத் தளம் நேற்று காலை 11.00 மணியிலிருந்து அடுத்த புதன்கிழமை பிற்பகல் 3.00 மணி வரை செயல்படும்.
மாணவர்கள் தாங்கள் படித்த தொடக்கப்பள்ளி வழியாகவும் உயர்நிலைப் பள்ளிக்கு விண்ணப்பிக்கமுடியும்.
“உயர்நிலைப் பள்ளியைத் தேர்வு செய்யும்போது அந்தப் பள்ளியின் கலாசாரம், நடவடிக்கைகள், சுற்றுச்சூழல் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு பெற்றோருடன் ஆலோசித்து முடிவு செய்யலாம்,” என்று கூட்டு அறிக்கை அறிவுறுத்தியுள்ளது.
டிசம்பர் 20ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். வரும் டிசம்பர் 23ஆம் தேதி அன்று உயர்நிலைப் பள்ளிக்கு மாணவர்கள் செல்ல வேண்டும் என்று அறிக்கை தெரிவித்தது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity