அடுத்த நிதியாண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட (பட்ஜெட்) அறிக்கையைத் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான ஹெங் சுவீ கியட் பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றுவார் என்று நிதி அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
திரு ஹெங் ஆற்றும் பட்ஜெட் உரையை பொதுமக்கள் தொலைக் காட்சி, வானொலி ஆகியவற்றில் பார்க்கலாம், கேட்கலாம்.
அத்துடன் சிங்கப்பூர் பட்ஜெட் இணையத்தளத்தின் மூலம் நேரடியாகப் பார்க்கலாம் என்றும் நிதி அமைச்சு தனது அறிக்கையில் விவரித்தது.
பட்ஜெட் அறிக்கையின் முக்கியமான அறிவிப்புகளைத் தெரிந்துகொள்ள பொதுமக்கள் நிதி அமைச்சின் ஃபேஸ்புக் பக்கத்தையும் டுவிட்டர் தளத்தையும் நாடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
பிரதமர் லீ சியன் லூங் தமது புத்தாண்டுச் செய்தியில், “எதிர் வரும் வரவு செலவுத் திட்ட அறிக்கையில் வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட குடும்பங்களுக்கு உதவுதல் போன்ற சிங்கப்பூரர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் அறிவிப்புகள் இடம்பெறும்," என்றார்.
“வர்த்தகங்கள் தங்கள் உற்பத் தித்திறனை உயர்த்தி, புதிய ஆற்றல்களை வளர்த்துக்கொள்ளுதலுக்கு உதவும் வகையிலும் உதவிகள் வழங்கப்படும்,” என்றும் பிரதமர் தெரிவித்திருந்தார்.
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் பட்ஜெட் 2020 கருத்தறியும் சந்திப்புகள் இம்மாதம் 10ஆம் தேதி நிறைவுபெறும்.
மக்கள் கழகம், அதன் அடித்தள அமைப்புகள் ஆகியவற்றுடன் நிதி அமைச்சு இணைந்து ‘ஆஸ்க் காப்பி காக்கிஸ்’ எனும் திட்டத் தின் மூலம் பொதுமக்களின் கருத் துகளையும் ஆலோசனைகளையும் தீவு முழுவதும் அமைக்கப்பட்ட 25 ‘ஆஸ்க் காப்பி காக்கிஸ்’ கூடங்களில் சேகரித்தது.
இம்மாதம் 4ஆம் தேதியும் 5ஆம் தேதியும் தீவு முழுவதும் மேலும் ஆறு கருத்தறியும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
பட்ஜெட் தொடர்பான தங்கள் பரிந்துரைகளை சிங்கப்பூர் பட்ஜெட் இணையத் தளத்திலும் ‘ரீச்’ எனும் அரசாங்க கருத்தறியும் பிரிவின் சமூக ஊடகங்கள் மூலமும் சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity