பொங்கல் விழா பொதுவாக தமிழர்களின் விழாவாகக் கொண்டாடப்பட்டு வந்தாலும் சிங்கப்பூரைப் பொறுத்தவரை அது பல இனத்தவர், பல சமயத்தினர் ஒன்றுகூடி கொண்டாடி மகிழும் நல்லிணக்கத் திருவிழாவாக அனுசரிக்கப்பட்டு வருவதாக பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் நடந்தபொங்கல் விழா மற்றும் ரத்ததான இயக்கத்தின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திரு லீ, ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், சீனப் புத்தாண்டு என்று வெவ்வேறு இன, சமயத்தவரின் பண்டிகைகள் கிட்டத்தட்ட ஒரே காலக்கட்டத்தில் சிங்கப்பூரில் கொண்டாடப்படுவதைச் சுட்டினார்.
“ஒவ்வோர் ஆண்டும், அரிசியும் பாலும் நிரம்பிய சூடான பானையில் பொங்கல் பொங்கவேண்டும் என்றும் நாம் அனைவரும் ‘பொங்கலோ பொங்கல்’ எனச் சொல்ல வேண்டும் என்றும் விரும்புகிறேன்,” என்றும் அவர் கூறினார். பெண்டிங் எல்ஆர்டி நிலையம் அருகிலுள்ள வெளிப்புறத் திடலில் நேற்றுக் காலை 9.30 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 3,000 பேர் கூடினர். கொண்டாட்டத்தில் புக்கிட் பாஞ்சாங் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் டியோ ஹோ பின்னும் இணைந்துகொண்டார்.
ஹாலந்து-புக்கிட் தீமா குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களான வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் திரு லியாங் எங் ஹுவாவும் நிகழ்ச் சியில் பங்கேற்றனர். புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் நல்ல போக்குவரத்துக் கட்டமைப்பு இருப்பதாகக் கூறிய டாக்டர் டியோ, அங்குள்ள இலகு ரயில் சேவையின் புதுப்பிப்புப் பணிகள் 2024ஆம் ஆண்டுவாக்கில் நிறைவடையக்கூடும் என்றார்.
தனிநபர் நடமாட்டச் சாதனங்களும் செல்லக்கூடிய கூடுதலான சைக்கிள் தடங்கள் கட்டப்படுவதாகவும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பாரம்பரியமான குத்துவிளக்கை ஏற்றிய பின்னர் பிரதமர் லீ, பொங்கல் பானையில் பால் ஊற்றிக் கிளறுவது, உரலில் அரிசியை இடிப்பது, முறத்தால் அரிசியைப் புடைப்பது போன்ற நடவடிக்கைகளில் உற்சாகத்துடன் ஈடுபட்டார். அத்துடன் விக்னேஷ் பால்பண்ணையிலிருந்து தருவிக்கப்பட்ட ஆடு, மாடுகளையும் அவர் பார்வையிட்டார். வெவ்வேறு இன நடனங்களும் பாடல் அங்கங்களும் பிரதமர் முன்னிலையில் படைக்கப்பட்டன.
சீனர், மலாய்க்காரர்களைத் தவிர, மெக்சிகோ, மியன்மார், பிலிப்பீன்ஸ், இத்தாலி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தோரும் தமிழர் பாரம்பரிய உடைகளை அணிந்து பொங்கல் வைத்தனர். “பொங்கல் வைக்க ஏற்பாட்டாளர்கள் எனக்குப் பொறுமையுடன் கற்பித்தனர்,” என்றார் பலவண்ணப் புடவையை அணிந்திருந்த சிங்கப்பூர் மெக்சிகோ சங்கத் தலைவர் அஸுல் அகுவிலார். இந்திய உணவும் அக்கம்பக்கத்தாரும் நிறைந்த நிகழ்ச்சி என்பதால் இங்கு வந்திருப்பதாகக் கூறினார் 70 வயது குடியிருப்பாளர் யூன் அன்.
சிறார்களுக்கான வண்ணம் தீட்டும் அங்கத்தில் தமது மகன் கலந்துகொண்டு மகிழ்ந்ததாக 33 வயது இல்லத்தரசி வி. திரிவேணி தெரிவித்தார். பள்ளி நண்பர்களைக் காண்பதற்காக 15 வயது முதல் இக்கொண்டாட்டங்களுக்கு ஆண்டு
தோறும் வருவதாகக் கூறிய பாதுகாவல் மேலதிகாரி ஃபதுரா, 20, இம்முறை தமது ஆறு மாதக் குழந்தையுடன் வந்திருப்பதாகச் சொன்னார்.
70க்கும் அதிகமான தமிழர் அல்லாதவர்கள் வேட்டி, சேலை அணிந்து ஒன்று கூடியதே இவ்வாண்டின் சிறப்பம்சம் என நிகழ்ச்சியின் தலைமை ஏற்பாட்டாளரும் புக்கிட் பாஞ்சாங் ஒருங்கிணைப்பு மற்றும் இயல்புரிமைக் குழுவின் தலைவருமான திரு பெருமாள் மூர்த்தி தெரிவித்தார்.