கொரோனா கிருமி தொடர்பான 10,000 சோதனைக் கருவிகளும் மூன்று ‘பாலிமரேஸ்’ சங்கிலி எதிர்வினைச் சாதனங்களும் (பிசிஆர்) முதற்கட்டமாக சீனாவுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார். கிருமித் தொற்று தொடர்பான சிங்கப்பூரின் நிபுணர்கள் சீனாவைச் சேர்ந்த நிபுணர்களுடன் கருத்து பரிமாற்றத்தில் ஈடுபடுவார்கள் என்று திரு ஹெங், தமது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று குறிப்பிட்டார்.
வூஹான் நகரில் மையம் கொண்டிருக்கும் கொரோனா கிருமித்தொற்று, இப்போது உலக அளவில் பொதுச் சுகாதாரச் சவாலாக உருவெடுத்திருப்பதால் நீண்டகாலமாக அணுக்கமான உறவு கொண்டுள்ள சிங்கப்பூரும் சீனாவும் இதில் ஒன்றுசேர்ந்து இந்தக் கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் துணைப் பிரதமர் தெரிவித்தார்.
“கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் சிங்கப்பூர் சீனாவுடனும் அனைத்துலக சமூகத்துடனும் இணைந்து செயல்படும்.
“இன்னும் அதிகமான உதவி அடுத்தடுத்து அனுப்பி வைக்கப்படும். அடுத்த சில வாரங்களில் மேலும் 10,000 சோதனைக் கருவிகள் சீனாவுக்கு அனுப்பி வைக்கப்படும்,” என்றும் துணைப் பிரதமர் சொன்னார்.
இவ்வாரத்தின் முற்பகுதியில், வர்த்தகச் சங்கங்கள், வர்த்தக சபைகள், நிறுவனங்கள், உள்ளூர் சமூக அமைப்புகள் ஆகியவற்றுடன் சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் இணைந்து, சீனாவில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவும் மனிதாபிமான நன்கொடை திரட்டைத் தொடங்கியது.
இந்தச் சமூகங்களுக்கு மேலும் $1 மில்லியன் தொகையை சிங்கப்பூர் அரசாங்கம் வழங்கும்.
“தொற்றுநோய்களுக்கு எல்லை வரையறை கிடையாது. ஒவ்வொரு நாடும் கிருமித்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். மேலும் இந்தப் போராட்டத்தில் மற்ற நாடுகளுடன் ஒத்துழைத்துச் செயல்பட வேண்டும்,” என்றும் துணைப் பிரதமர் கூறினார்.
“நிலைமை ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டிருக்கும் வேளையில் சிங்கப்பூர் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும்.
“மேலும் சீனாவுடனும் அனைத்துலக சமூகத்துடனும் இணைந்து கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும். இந்தச் சவாலை ஒன்றுசேர்ந்து சமாளிக்கலாம்,” என்று திரு ஹெங் நம்பிக்கை தெரிவித்தார்.
நேற்று இரவு வரை, சீனாவில் 31,500க்கு மேலானோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.