சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்வோர் அச்சப்படத் தேவையில்லை.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக இந்திய அரசு கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன்படி சிங்கப்பூரிலிருந்து செல்வோருக்கு அனுமதி மறுக்கப்படுமோ என்ற அச்சத்தில் வாசகர்கள் சிலர் தமிழ் முரசை அணுகினர்.
அடுத்த சில நாட்களில் பயணத் திட்டங்களை வகுத்துள்ள அவர்கள், திட்டமிட்டபடி இந்தியா செல்ல முடியுமா என ஐயம் கொண்டனர்.
லிட்டில் இந்தியாவில் இயங்கும் சில பயண முகவர்களை அணுகியபோது அரசல் புரசலான தகவல்களே கிடைத்தன. இந்த நிலையில், சிங்கப்பூருக்கான இந்தியத் தூதரகம் ஐயங்களைத் தெளிவுபடுத்தியுள்ளது.
இந்தியா செல்ல விரும்பும் சிங்கப்பூரர்களுக்கு தொடர்ந்து விசா வழங்கப்பட்டு வருகிறது.
நேற்று இந்திய அரசின் சுகாதார, குடும்ப நல அமைச்சு வெளியிட்ட அறிக்கையின்படி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு விசா வழங்கப்படுவது நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சீனா, தென்கொரியா, ஜப்பான், இத்தாலி, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து செல்வோருக்கு விசா மறுக்கப்பட்டு வந்தது. இம்மாதம் 3ஆம் தேதி அல்லது அதற்குமுன் இந்த நாடுகளைச் சேர்ந்தோருக்கு வழங்கப்பட்ட இந்திய விசா செல்லாது.
விசா மறுக்கப்பட்டுள்ள மேற்குறிப்பிடப்பட்ட எட்டு நாடுகளுக்கு அண்மையில் சென்ற எந்த நாட்டவருக்கும் இந்தியாவிற்குள் நுழைய அனுமதியில்லை.
சிங்கப்பூர், சீனா, ஹாங்காங், ஜப்பான், இத்தாலி, தாய்லாந்து, ஈரான், மலேசியா, பிரான்ஸ், ஸ்பெயின், தென்கொரியா, ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா செல்வோர், பயணத் தேதியிலிருந்து 14 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
சிங்கப்பூரிலிருந்து செல்வோர் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது, இந்தியாவில் நுழையும்போது தொலைபேசி எண், இந்தியாவில் தங்கும் முகவரி போன்ற தனிப்பட்ட விவரங்களுடன் கூடிய சுயஉறுதிமொழிப் படிவத்தைப் பூர்த்தி செய்து, சமர்ப்பிக்கவேண்டும். இந்தியாவிற்குள் நுழையும் அனைவருக்கும் இது பொருந்தும்.
அத்துடன், பயணம் செய்த நாடுகள் பற்றிய தகவல்களைச் சுகாதார மற்றும் குடிநுழைவு அதிகாரிகளிடம் தெரிவிக்கவேண்டும். இந்தியாவின் அனைத்துக் குடிநுழைவு மையங்களிலும் தற்போது இந்நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
#கொவிட்-19 #கொரோனா #இந்தியா #சிங்கப்பூர் #தூதரகம்