சிங்கப்பூரில் கொரோனா கிருமிப்பரவலை கையாளும் அமைச்சுகள்நிலை பணிக்குழுவுக்குத் தலைமை தாங்கும் அமைச்சர்களுள் ஒருவரான திரு லாரன்ஸ் வோங், இந்தக் கொள்ளைநோயைக் கையாளுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகளுக்காக சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்றி தெரிவித்து இன்று (மார்ச் 25) நாடாளுமன்றத்தில் பேசியபோது, உரையைத் தொடர முடியாமல் தேம்பியதுடன் கண்ணீர் விட்டு அழுதார்.
“வார்த்தைகள் போதாது,” என்று கூறிய திரு லாரன்ஸ் வோங்கின் குரல் தழுதழுத்தது. மேற்கொண்டு பேச இயலாமல் உரையை நிறுத்தியதுடன் கண்ணீர் சிந்தினார் அவர். “சற்று நேரம் தாருங்கள்,” என்று கூறி தன்னை அசுவாசப்படுத்திக்கொண்டு பின்னர் உரையைத் தொடர்ந்த அவர் கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான போரில் பங்களிக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிராகப் போராடி வரும் சிங்கப்பூரில் அண்மைய நாட்களில் வெளிநாடுகளிலிருந்து திரும்புவோருக்கு ஏற்படும் கிருமித்தொற்று காரணமாக பாதிப்பு எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது.
நேற்று நண்பகல் நிலவரப்படி, 558 பேர் இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை கொரோனா தொற்று காரணமாக இருவர் உயிரிழந்தனர்.
#சிங்கப்பூர் #நாடாளுமன்றம் #கொரோனா