சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளின் நிலை குறித்து சிலர் பொய்ச் செய்திகளைப் பரப்பி வருவதாகவும் பயத்தையும் பீதியையும் மட்டுமின்றி வன்முறையையும் தூண்டக்கூடிய வகையில் அந்தச் செயல்கள் தோன்றுவதாகவும் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் தெரிவித்து உள்ளார்.
அத்தகைய தனிப்பட்டவர்கள் உள்ளூரையும் வெளிநாடுகளையும் சேர்ந்தவர்கள் என்று அதிகாரிகள் அறிந்து வைத்திருப்பதாக அமைச்சர் கூறினார்.
அவர்கள் பொய்களை காணொளி வடிவிலும் நிழற்படங்கள் வடிவிலும் பரப்புவதோடு செய்தி ஒளிவழிகளிலிருந்து எடுக்கப்பட்ட படங்களைத் திரித்தும் வெளியிடுகிறார்கள் என்றார் திரு சண்முகம். வேலையும் சம்பளமும் இல்லாத
இது போன்ற பொய்யான செய்திகள் இங்கு வசிக்கும் கிட்டத்தட்ட 300,000 வெளிநாட்டு ஊழியர்களிடையே கோபத்தையும் பதற்றத்தையும் வேண்டுமென்றே தூண்டும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கக்கூடும் என்று சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் செய்தியாளர்களுடன் இன்று நடத்திய இணையம் வழியான சந்திப்பில் தெரிவித்தார்.
ஊழியர்கள் இங்கு தவறாக நடத்தப்படுகின்றனர் என்று சிங்கப்பூரர்களை நம்ப வைக்க இதுபோன்ற ஆபத்துமிக்க காணொளிகள் முற்படுகின்றன என்று அவர் கூறினார்.
“ஊழியர்களை ஆத்திரமூட்ட பொய்யைப் பரப்புபவர்கள் அதனால் என்ன விளையும் என்பதை அறிந்திருக்க மாட்டார்கள். அது கடுமையான சட்ட ஒழுங்கு சூழலை உருவாக்கக்கூடும். நாங்கள் இதனை கடுமையான ஒன்றாகக் கருதுகிறோம். பொய்ச் செய்திகளை வேண்டுமென்றே பரப்புவோரை அணுக்கமாகக் கண் காணிக்கும் அவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர்.
“போலி கணக்குகளை வைத்து சிலர் வேறுநோக்கத்துடன் செயல் படுகிறார்கள். இது மிக வருந்தத்தக்க ஒன்று,” என்று கூறிய அமைச்சர் சண்முகம், சட்டத்தை மீறுவோர் தண்டிக்கப்படுவர் என்று எச்சரித்தார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுக்கு தமிழ் முரசு நாளிதழின் நாளைய (ஏப்ரல் 30) அச்சுப் பிரதியை நாடலாம்.
தமிழ் முரசு நாளிதளின் மின்னிலக்கப் பதிப்புக்கு (இ-பேப்பர்) தற்போதைய மாதாந்தர கட்டணம் $3.90 மட்டுமே. மேல் விவரங்களுக்கு: https://tmsub.sg/tmadfb