மலேசியாவில் நடப்பிலுள்ள நிபந்தனையுடனான நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு மேலும் நான்கு வாரங்களுக்கு, அதாவது ஜூன் மாதம் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டு மக்களுக்கு இன்று ஆற்றிய உரையின்போது இதை அறிவித்த அந்நாட்டுப் பிரதமர் முகைதீன் யாசின், நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் இருந்ததைவிட தற்பொழுது கொரோனா கிருமித் தொற்று சம்பவங்கள் குறைந்துள்ளபோதிலும், அதற்கு எதிரான போர் இன்னமும் தொடர்வதாகத் தெரிவித்தார்.
“கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான போரில் நம்பிக்கை தரும் வகையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளபோதிலும், நமக்கு இன்னும் முழு வெற்றி கிட்டவில்லை,” என்று அவர் எச்சரித்தார்.
அத்துடன், பெரும்பாலான மலேசியர்கள் கிருமித்தொற்று பரவாமல் இருக்க அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என விரும்புவதாக அவர் விளக்கினார்.
“ஆகையால், சுகாதார அமைச்சின் அறிவுரைப்படியும், தேசிய பாதுகாப்பு மன்ற அறிவுரைப்படியும் நாட்டில் இம்மாதம் 12ஆம் தேதிவரை நடப்பில் இருக்கும் நடமாட்டடக் கட்டுப்பாடு உத்தரவு ஜூன் மாதம் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப் படும்,” என்று அவர் கூறினார்.
மலேசியாவில் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரிக்கத் தொடங்கியதும் மார்ச் மாதம் 18ஆம் தேதி நடமாட்டக் கட்டுப்பாட்டை முதன்முதலில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பள்ளிகள், அத்தியாவசியமற்ற வர்த்தகங்கள் மூடப்பட்டன. உணவு, வாழ்க்கைக்குத் தேவையான முக்கியப் பொருட்களை வாங்கவும் அவசர மருத்துவ சிகிச்சைக்கு மட்டுமே பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே செல்லலாம்.
இந்தக் கட்டுப்பாடு இம்மாதம் 4ஆம் தேதி ஓரளவு தளர்த்தப்பட்டு பெருவாரியான வர்த்தகங்கள் செயல்படவும் மக்கள் வேலைக்கு செல்லவும் அனுமதிக்கப்பட்டது.
எனினும், பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு, பெருமளவிலான கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நடப்பில் உள்ளன. வேலைக்குச் செல்வதைத் தவிர மாநிலங்களுக்கு இடையேயான பயணத் தடை இன்னமும் தொடர்கின்றது. அத்துடன், மலேசியாவில் பயணிகள் வருகைக்கும் தடை நீடிக்கிறது.
எதிர்வரும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு தங்கள் சொந்த ஊர்களுக்கு மக்கள் பெரும் கும்பலாகச் செல்வதற்கு அனுமதி இல்லை.
அதுபோல், இல்லங்களில் பொது வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் முகைதீன் யாசின் கூறியுள்ளார்.எனினும், 20 பேருக்கு மேற்போகாத சிறு ஒன்றுகூடல்களுக்கு அனுமதி உண்டு என அவர் விளக்கினர்.
“மெத்தனமாக இருக்க வேண்டாம். வேலைக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது கிருமித்தொற்று ஏற்படும் அபாயமும் அதிகரிக்கும். இனி வரும் வாரங்கள் முக்கியமானவை,” என்று எச்சரித்த திரு முகைதீன், கிருமித்தொற்று சம்பவங்கள் அதிகரிக்கும் பகுதிகளை அரசு முடக்கி வைக்கத் தயங்காது என்றார்.
மலேசியாவில் புதிதாகக் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க, நடமாட்டக் கட்டுப்பாடு உதவியுள்ளது. நேற்று முன்தினம் வரை, மொத்தம் 6,589 பேருக்கு கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 108 பேர் உயிரிழந்து விட்டனர். 75 விழுக்காட்டு நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.