இந்திய நாட்டவரான ராஜகோபால் சத்தியவாசன் காலையில் எழுந்ததும் யோகா, சிங்கப்பூர் நீரிணையின் கண்கவர் காட்சியை ரசிப்பது என்று நாளைத் தொடங்குகிறார்.
அவரைப் போலவே, கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்த சுமார் 3,000 வெளிநாட்டு ஊழியர்கள் சூப்பர்ஸ்டார் ஜெமினி, சூப்பர்ஸ்டார் அக்குவேரியஸ் ஆகிய இரண்டு சொகுசுக் கப்பல்களில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மரினா பே சொகுசுக் கப்பல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள இந்த கப்பல்களில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடாத ஊழியர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த கப்பல்களை ஜென்டிங் குரூஸ் லைன்ஸ் இயக்கி வருகிறது.
அந்த நிறுவனம் ஜூலை மாத இறுதி வரை ஊழியர்கள் தங்க வைக்க தயாராக இருப்பதாக டிரீம் குரூசஸ் நிறுவனத்தின் தலைவரான திரு மைக்கேல் கோ இன்று (மே 23) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
தேவைப்பட்டால் நீடித்த காலத்துக்கும் இந்த ஏற்பாட்டை வழங்கமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒவ்வொரு கப்பலிலும் சுமார் 200 கப்பல் ஊழியர்கள் பணியில் உள்ளனர்.
கிருமித் தொற்றைக் குறைக்கும் நோக்கில் ஊழியர் தங்கும் விடுதிகளில் அதிகமானோர் தங்குவதைக் குறைக்கும் அரசாங்கத்தின் திட்டங்களின் ஓர் அங்கம் இந்த தற்காலிக ஏற்பாடு.
கப்பலில் வசிப்பது பிடித்திருந்தாலும், வேலைக்குச் சென்று, நண்பர்களைப் பார்த்து 2 மாதங்களாகிவிட்டது என்று கூறும் சத்தியவாசன் வேலைக்கும் தனது டோ குவான் விடுதிக்கும் விரைவில் திரும்ப விரும்புகிறார்.
பாதுகாப்பு கண்காணிப்பாளராகப் பணிபுரியும் திரு சத்தியவாசனுக்கு மார்ச் மாத மத்தியில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. டான் டோக் செங் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மார்ச் 29ஆம் தேதி குணமடைந்தார். பின்னர் ஹோட்டலில் தங்கியிருந்த அவர், கப்பலுக்கு மாற்றப்பட்டார்.
கப்பலில் தங்கவைக்கப்பட்ட 200 பேர் இதுவரை விடுதிகளுக்குத் திரும்பியிருப்பதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தெரிவித்தது.
இந்தியாவில் சொந்த ஊரில் இருக்கும் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பெரும்பாலான நேரங்களில் காணொளி மூலம் உரையாடும் திரு சத்தியவாசன், கிருமித்தொற்றிலிருந்து மீண்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.