துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தலைமையில் மக்கள் செயல் கட்சி ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் களமிறங்கி இருக்கும் நிலையில், அங்கு நல்லதொரு போட்டி இருக்கும் என எதிர்பார்ப்பதாக பாட்டாளிக் கட்சி வேட்பாளர் குழு தெரிவித்துள்ளது.
பாட்டாளிக் கட்சி ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் தனது குழுவைக் களமிறக்கி இருப்பது இது நான்காவது முறை. கடந்த 2015 பொதுத் தேர்தலில் அக்கட்சி அங்கு 39.3% வாக்குகளைப் பெற்றது. அப்போது, முன்னாள் மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே தலைமையிலான மசெக குழு 60.7% வாக்குகளுடன் வெற்றி பெற்றது.
ஆனால், இம்முறை அதிகமான குடியிருப்பாளர்களைச் சென்றடையும் வகையில் திட்டமிட்டு, கவனம் செலுத்தி வருவதாக ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதி பாட்டாளிக் கட்சி வேட்பாளர்களில் ஒருவரான திரு கென்னத் ஃபூ, 43, சொன்னார்.
துணைப் பிரதமர் ஹெங், தெம்பனிஸ் குழுத் தொகுதியில் இருந்து ஈஸ்ட் கோஸ்ட்டுக்கு மாறியது வியப்பளிப்பதாகக் கூறிய அவர், “திரு ஹெங் தேசியத் தொலைக்காட்சியில் அடிக்கடி தோன்றுகிறார். அவர்தான் துணைப் பிரதமர் என அனைவரும் அறிவர். இந்தத் தொகுதியில் நல்லதொரு போட்டி இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்றார்.
திரு ஃபூவுடன் களமிறங்கும் மற்ற நான்கு பாட்டாளிக் கட்சி வேட்பாளர்களும் ஈஸ்ட் கோஸ்ட் தொகுதிக்குப் புதுமுகங்கள்தான்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online