சிங்கப்பூரின் மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு உயர்த்த திட்டமில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. மக்கள்தொகையை 10 மில்லியனுக்கு உயர்த்த அரசாங்கம் திட்டம் கொண்டிருப்பதாக சில சமூக வகைத்தளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதைப் பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில் இந்தப் பொய்ச் செய்தி வலம் வருவதாக அது கூறியது.
இந்தப் பொய்ச் செய்தி முற்றிலும் பொய்யானது என்று பிரதமர் அலுவலகத்தின் தேசிய மக்கள்தொகை, திறன் பிரிவு தெரிவித்துள்ளது.
பிறப்பு விகிதம், ஆயுட்காலம், உலகளாவிய மேம்பாடுகள் போன்ற காரணங்கள் சிங்கப்பூரின் மக்கள்தொகையைப் பாதித்திருப்பதாக மார்ச் மாதம் அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றை பிரதமர் அலுவலகம் சுட்டியது.
அதில் குறிப்பட்ட மக்கள்தொகையை எட்ட அரசாங்கம் இலக்கு கொண்டிருப்பதாக குறிப்பிடப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறப்பு விகிதம், ஆயுட்காலம், உலகளாவிய மேம்பாடுகள் போன்ற காரணங்களைக் கவனமாகக் கையாண்டு சிங்கப்பூரர்களின் வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய ஒற்றுமையான சமுதாயம், துடிப்புமிக்க பொருளியல் ஆகியவற்றை உறுதி செய்ய அரசாங்கம் இலக்கு கொண்டிருப்பதாக பிரதமர் அலுவலகம் கூறியது.
“நமது மக்கள்தொகையை நாங்கள் மிக அணுக்கமாக கண்காணித்து வருகிறோம். உள்கட்டமைப்பு, சமூக மேம்பாடு ஆகியவற்றுடன் நமது மக்கள்தொகை கொள்கைகளையும் நாங்கள் அடிக்கடி மறுஆய்வு செய்து வருகிறோம்,” என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.