புக்கிட் பாத்தோக்கில் பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடு, மேம்பாட்டுப் பணி திட்டங்களில் தாமதம் போன்ற விஷயங்களை அங்கு போட்டியிடும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் சீ சூன் ஜுவான் சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொண்டு வருகிறார்.
நகர மன்றம் வெளியிட்ட அறிக்கையில் சில குறைபாடுகள் இருந்ததாக ஒப்புக்கொண்ட புக்கிட் பாத்தோக் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு முரளி பிள்ளை, அவை நகர மன்ற செயல் முறையினால் வந்த குறைபாடு அல்ல என்பதை தெரிவித்தார்.
புக்கிட் பாத்தோக்கில் நேற்று குடியிருப்பாளர்களைச் சந்திக்க தொகுதி உலா மேற்கொண்ட திரு முரளி பிள்ளை செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசினார்.
ஜூரோங்-கிளமெண்டி நகர மன்றம் 85,000 குடியிருப்பு, வர்த்தகப் பிரிவுகளைக் கட்டுப்படியான விலையில் பயன் தரும் வகையில் நிர்வகிப்பதை யாரும் மறந்திடக்கூடாது என்று நினைவுபடுத்தினார்.
“இந்தக் குறைபாடுகளைப் பொறுத்தவரையில், இதுதொடர்பான அதிகாரியின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். தரமான சேவை தொடர்ந்து வழங்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்,” என்றார் திரு முரளி பிள்ளை.
முழு நேர நாடாளுமன்ற உறுப்பினராக செயல்பட்டால் குடியிருப்பாளர்களுக்கு இன்னும் நன்றாக சேவையாற்றலாம் என்ற எதிர்க்கட்சி வேட்பாளர் கூறிய கருத்துக்கு திரு முரளி பிள்ளை விளக்கம் தந்தார்.
நாடாளுமன்றத்தில் அனைவருமே முழு நேர நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயல்பட்டால், ஒரு பிரச்சினையை அனைவரும் ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கும்நிலை ஏற்படும் என்றும் சில முக்கிய விவகாரங்களில் போதிய கவனம் செலுத்த முடியாமல் போகலாம் என்றும் அவர் கூறினார்.
இதனால்தான் நாடாளுமன்றத்தில் இதுவரையில் வெவ்வேறு பின்னணிகளிலிருந்து வருவோர் சேர்க்கப்படுகின்றனர். அதோடு தாம் ஒரு வழக்கறிஞராக அனுபவம் கொண்டிருப்பதால், புதிதாக வரையப்படும் சட்டங்களுக்கும் தம்மால் பங்களிக்க முடிகின்றது என்று குறிப்பிட்டார்.
தேர்தல் சமயம் இணையத்தில் வேட்பாளர்கள் குறித்த குற்றச்சாட்டுகளும் குறைகூறல்களும் இடம்பெற்று வரும் நிலையில், அரசியல் விவகாரங்கள் பொறுப்பான முறையில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் திரு முரளி பிள்ளை.
அவ்வாறு செய்தால்தான் சிங்கப்பூருக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற கடப்பாடு கொண்டோரை ஈர்க்க முடியும் என்று அவர் கூறினார்.
தம் குடும்பத்தினர் மீது அவதூறான கருத்துகள் பதிவாகி உள்ளது என்பதை விளக்கும் காணொளியை திரு முரளி பிள்ளை நேற்று முன்தினம் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்தார்.
அந்த சர்ச்சையிலிருந்து விடுபட்டு தேர்தல் பிரசாரத்திலும் புக்கிட் பாத்தோக்கின் எதிர்காலத் திட்டங்களிலும் கவனம்செலுத்தப்போவதாகச் சொன்னார்.