உள்ளூரைச் சேர்ந்த 100,000 நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள், தொழில்நுட்பர்கள் வேலையில்லாமல் உள்ளனர் எனக் கூறப்படுவதில் உண்மையில்லை என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று (ஜூலை 1) இரவு தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட அரசியல் விவாத நிகழ்ச்சியின்போது சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் சார்பில் பங்கேற்ற திரு பிரான்சிஸ் யுவென், ‘பிஎம்இடி’ பிரிவின்கீழ் வரும் உள்ளூர்வாசிகள் 100,000 பேர் வேலையின்றி இருப்பதாகக் குறிப்பிட்டார்.
அதனை மறுத்து இன்று விளக்கமளித்த மனிதவள அமைச்சு, கடந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி அந்தப் பிரிவைச் சேர்ந்த 39,000 பேர் வேலையில்லாமல் இருந்ததாக விளக்கமளித்தது.
இவ்வாண்டு ஜனவரி 30ஆம் தேதி வெளியிடப்பட்ட ‘சிங்கப்பூர் ஊழியரணி அறிக்கை 2019’ல் 39,000 பேர் என்ற அந்த எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியது.
அதுகுறித்த கருத்தாய்வு ஆண்டிற்கொரு முறை நடத்தப்படுவதால் இந்த ஆண்டிற்கான ஊழியரணி அறிக்கை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என்றும் அமைச்சு தெரிவித்தது.
ஆனால், சுவா சூ காங் குழுத்தொகுதியில் போட்டியிடும் 70 வயதான திரு யுவென், அமைச்சின் புள்ளிவிவரம் காலாவதியாகிப் போன ஒன்று எனக் குறிப்பிட்டார்.
“2019 ஜூன் மாத நிலவரம் அது. சென்ற ஆண்டின் மூன்றாம், நான்காம் காலாண்டுகளில் ஆள்குறைப்பு செய்யப்பட்டவர்களையும் 2020ல் எதிர்பார்க்கப்படும் எண்ணிக்கையையும் அது உள்ளடக்கவில்லை.
“அதே அறிக்கையில், 2019ஆம் ஆண்டில் ஆள்குறைப்பு செய்யப்பட்டவர்களில் 70 விழுக்காட்டினர் ‘பிஎம்இடி’ பிரிவினர் என மனிதவள அமைச்சு கூறியுள்ளது. நடப்பாண்டில் 100,000 முதல் 200,000 பேர் வரை வேலை இழப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் 70 விழுக்காட்டினர் ‘பிஎம்இடி’ பிரிவினராக இருக்கும் பட்சத்தில், 100,000 பேர் வேலையின்றி இருக்கின்றனர் என நாங்கள் மதிப்பிட்டோம்,” என்று திரு யுவென் சொன்னதாக ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தி தெரிவித்தது.
அத்துடன், அப்படி 100,000 பேர் என்ற எண்ணிக்கை மதிப்பீட்டின்போது, இவ்வாண்டு வேலைச் சந்தையில் நுழையும் 30,000க்கும் மேற்பட்ட புதிய பட்டதாரிகளில் ஒரு பெரிய விகிதத்தினரையும் தமது கட்சி கணக்கில் எடுத்துக்கொண்டதாகவும் திரு யுவென் கூறினார்.
தொலைக்காட்சி விவாதத்தின்போது, “‘பிஎம்இடி’ பிரிவைச் சேர்ந்த கிட்டத்தட்ட 400,000 வெளிநாட்டு ஊழியர்கள் இங்கு பணியாற்றுகின்றனர். அவர்களின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும்,” என்று திரு யுவன் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online