அனைத்து அரசியல் வேட்பாளர்களுக்கும் நேர்மை மிக முக்கியம் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார்.
பொய்யான தகவல்களைப் பரப்பிய சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலாளர் சீ சூன் ஜவான் செய்தது, ‘முறையான அரசியல் அன்று’ என்று அவர் இன்று (ஜூலை 3) செய்தியாளர்களிடம் குறிப்பிட்டார்.
புதன்கிழமையன்று தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பான கட்சி விவாதத்தின்போது சிங்கப்பூரின் மக்கள் தொகையை 10 மில்லியனாக அதிகரிக்கும் எண்ணம் திரு ஹெங்குக்கு உள்ளதாக டாக்டர் சீ கூறியிருந்தார்.
இது குறித்து தமது ஃபேஸ்புக் பதிவில் கருத்துரைத்த திரு ஹெங் சுவீ கியட், சிங்கப்பூரின் மக்கள்தொகையை 10 மில்லியனாக அதிகரிக்க திட்டமிட வேண்டும் எனத் தாம் கூறவில்லை என்பதை ஆணித்தரமாக வலியுறுத்தினார்.
சிங்கப்பூர் அதன் மக்கள் தொகையை பத்து மில்லியனாக உயர்த்துவது தொடர்பில் அரசாங்கம் எந்த ஒரு திட்டத்தையோ இலக்கையோ தெரிவிக்கவில்லை என்று ‘தேசிய மக்கள் தொகை மற்றும் திறன் பிரிவு’ம் தெரிவித்தது.
இவ்வாறு திரு ஹெங் தெளிவுபடுத்தியும் பத்து மில்லியன் மக்கள் தொகை திட்டத்திற்கு மறுப்பு தெரிவிக்குமாறு வாக்காளர்களிடம் சிஜக கேட்டுக்கொண்டதில் இந்த விவாதத்தில் தான் வெற்றி பெற்றுள்ளதாக குறிப்பிடுள்ளது.
அதைத் தொடர்ந்து சிஜகவின் தேர்தல் பிரசாரம் பயனற்றதாகிவிட்டதாக மக்கள் செயல் கட்சி பதிலடி கொடுத்தது.
சிஜகவின் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சத்தில் ஒன்று பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளதாக மசெக சுட்டியுள்ளது.
விவாதத்தில் திரு சீ சூன் ஜுவான் தமது பொய்யுரையை மூன்று முறை மீண்டும் மீண்டும் கூறியதைச் சுட்டிக்காட்டிய மக்கள் செயல் கட்சியின் அறிக்கை, மூன்று முறையும் அவருடைய கூற்று தவறு என கட்சியின் பிரிதிநிதி டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் திருத்தியதாகத் தெரிவித்தது.
இந்நிலையில் கொவிட்-19 தொற்று சூழலும் உலகளாவிய பொருளியல் மந்தநிலையும் சிங்கப்பூருக்குப் பெரும் சவால்களாகியுள்ளதாக திரு ஹெங் சுட்டினார்.
“நம் கவனத்தைச் சிதறவிட வேண்டாம். தற்போதைய முக்கிய விவகாரங்களில் கவனம் செலுத்துவோம்,” என்றார் அவர்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online